என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala assembly"

    • SIR தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
    • தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    கேரள மாநில சட்டசபையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி எம்.எல்.ஏ.-க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    தீர்மானம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிகையில் "SIR-ஐ செயல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த அவசர நடவடிக்கை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    SIR நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.

    பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை எந்தவித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டது. தேசிய அளவில் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

    மேலும், பீகார் மாநில SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் SIRஐ செயல்படுத்த இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    • எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சபையில் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
    • தற்போதைய கூட்டத்தொடரை விரைவாக முடிக்க முதல்வர் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவா தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் எதிரே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் போராட்டம் நடத்தினர். சபாநாயகரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். அவர்களை கலைந்துசெல்லும்படி பாதுகாவலர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

    இதையடுத்து எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பாதுகாவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில எம்எல்ஏக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    4 எம்எல்ஏக்களுக்கு காயம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சதீசன் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சபையில் மறுக்கப்படுவதாகவும், அண்மையில் சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தை ஒத்திவைப்பு தீர்மானமாக முன்வைத்ததை சரியான காரணம் இன்றி சபாநாயகர் நிராகரித்துவிட்டார் என்றும் சதீசன் கூறினார்.

    முதல்வர் பினராயி விஜயனின் அழுத்தத்தின் பேரில் சபாநாயகர் ஏ.என்.ஷம்ஷீர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுகிறார். சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள முதல்வர் பயப்படுகிறார், அதனால் தற்போதைய கூட்டத்தொடரை விரைவாக முடிக்க விரும்புகிறார் என்றும் சதீசன் தெரிவித்தார்.

    • கேரள மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
    • பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்றைய தினம் கேரள சட்டசபை கூடியது. அப்போது மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும். உண்மையான பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசை திருப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.
    • முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்.

    பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது.

    பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டது.

    இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    கேரளா என்ற பெயரை கேரளம் என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு கேரளம் என அரசியலமைப்பில் மாற்ற பினராயி விஜயன் வேண்டுகோள்.

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் "கேரளா" என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.

    "மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

    இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
    • இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    மக்களவை, சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

    இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கேரள சட்டசபையில் முதல் மந்திரி பினராயி விஜயன் சார்பில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி எம்.பி. ராஜேஷ் தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இந்தத் திட்டம் நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் வழிவகுக்கும் என தெரிவித்தார்.

    • ஆழ்கடல் கனிம சுரங்கத்தை தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்தது.
    • இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதல் மந்திரி பினராயி விஜயன் ஆளும் முன்னணியின் ஏஜெண்டாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சபாநாயகர் முன் எதிர்க்கட்சியான யுடிஎப் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்திய நிலையில், முதல் மந்திரி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனை தனது உரையை முடிக்க அனுமதிக்காததாலும், ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் ஆழ்கடல் சுரங்கத் தீர்மானம் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

    மாநில கடற்கரையோரத்தில் ஆழ்கடல் சுரங்கத்தைத் தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    கேரளாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், சினிமா டிக்கெட் மற்றும் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயருகிறது. #KeralaBudget #KeralaBudget2019
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையில் இன்று நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 195 பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வனத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்களுக்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திரைத்துறை வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ.8 கோடி, உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.32 கோடி, மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கு ரூ.788 கோடி, மலபார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.35 கோடி, கோச்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.15 கோடி, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ரூ.49 கோடி, தேவசம் போர்டுகளுக்கு ரூ.100 கோடி, மாற்றுத்திறனாளிகள் பென்சன் திட்டத்திற்காக ரூ.500 கோடி, சிறப்பு குழந்தைகள் நலனுக்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.



    பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலத்திட்ட பணிகளுக்காக ரூ.114 கோடி, முன்னேறிய வகுப்பினரின் மேம்பாட்டுக்காக ரூ.42 கோடி ஒதுக்கப்படும். பெண்களுக்காக பிரத்யேகமாக ஹஜ் இல்லம் கட்டப்படும். வேளாண் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க்காப்பீட்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படும்.

    மழை வெள்ளத்தால் பேரிழப்பை சந்தித்த கேரள மாநிலத்தை மீட்டெடுத்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 25 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை தொடங்குவதற்காக, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வருவாயை மேலும் உயர்த்துவதற்காக, ஐந்தாவது அட்டவணையின் கீழ் வரும் தங்கம், வெள்ளி, பிளாட்டின நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மீதும் 0.25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

    பீர், ஒயின் உள்ளிட்ட அனைத்து வகை வெளிநாட்டு மதுபானங்களின் முதல் விற்பனை மீது 2 சதவீத வரி விதிக்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 180 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    இதேபோல் சினிமா டிக்கெட்டுகள் மீது 10 சதவீத பொழுதுபோக்கு வரி விதிக்கப்படும். 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் சினிமா டிக்கெட் விலை உயரும். இதேபோல் புதிய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களுக்கு ஒரு சதவீதம் (ஒரு முறை) வரி விதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KeralaBudget #KeralaBudget2019
    தற்காலிக கண்டக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள கண்டக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், தற்காலிக கண்டக்டர்கள் பணியில் இருந்ததால் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டக்டர்களுக்கு உடனடியாக பணி வழங்கும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து, 3861 தற்காலிக கண்டக்டர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். இந்த வழக்கை மாநில அரசு சரியாக அணுகவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.


    இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்தது. தற்காலிக கண்டக்டர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியது. தற்காலிக கண்டக்டர்களை பணிநீக்கம் செய்வதற்கு இடதுசாரி அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், சட்டங்களை மீறியதாகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

    ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகர் நிராகரித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 8-வது நாளாக இன்றும் கேரள சட்டசபையில் பணிகள் முடங்கின. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சபாநாயகர் தலையிட்டு 3 எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.



    இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

    அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    கேரளாவில் எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபை கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபரிமலை விவகாரத்தை கிளப்பினர்.



    சபாநாயகர் தலையிட்டு 3 எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சபாநாயகர் பதில் பேசாமல் மவுனமாக இருந்ததால் அவரை மறைக்கும் அளவிற்கு மிகப்பெரிய பேனர்களையும், பதாகைகளையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி நேரம் முடங்கியது.

    இதன் காரணமாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்த சபாநாயகர், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அழைத்தார். அத்துடன் இன்று பட்டியலிடப்பட்ட மற்ற அலுவல்களை விரைந்து முடிக்கவும் விரும்பினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #Sabarimala #KeralaAssembly
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கேரள சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருவதால் சட்டசபை கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன் காரணமாக சபையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இன்றும் கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் சபை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.



    அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபை நடுவே சென்று சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் சபாநாயகர் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகரால் எம்.எல்.ஏ.க்களை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    ஆனாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் காங்கிரசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனே எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதலா பினராயி விஜயனுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.

    இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #Sabarimala #KeralaAssembly



    ×