search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallalagar temple"

    • தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
    • மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு அடுத்தபடியாக 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி திருத்தேரில் அலங்கார திரைச்சீலை கட்டுதல், தேர்ச்சக்கரம் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பித்தல், மரக்குதிரைகள் பொருத்துதல், தேர் முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து வடங்கள் பொருத்தப்பட்டன. காலை 6.30 மணிக்கு மேல் பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் உள்ளிட்டோர் அருள் வந்து சாமியாடியபடி வந்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை வாசல்களை கடந்து 4 ரதவீதிகளிலும் அசைந்தாடி வந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதேபோல் தேரோட்டத்தை வயதான பக்தர்கள் மற்றும் பெண்கள் சிரமமின்றி காணும் வகையில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தேரோட்ட விழா முடிந்து இன்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை (2-ந் தேதி, புதன்கிழமை) புஷ்ப சப்பரம், 3-ந்தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி வரை மட்டும் மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் பஸ்கள் வலையபட்டி வழியாக மரக்காயர்புரம் சென்று பின்பு மேலூர் செல்லும் வகையிலும், மேலூரில் இருந்து அழகர் கோவில் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மரக்காயர்புரம் சென்று நாயக்கன் பட்டி வழியாகவும், மதுரைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்கினார்.

    இதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலாக மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மதுரை அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள்-ரெங்கமன்னார் குறடு மண்டபத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
    கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
    மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். சிகர நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந்தேதி வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 20-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந்தேதி இரவு பூப்பல்லக்கு விழாவும் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர், தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வந்தார். அங்கு “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷத்துடன் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    இந்த விழாவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.

    இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகர்மலைக்கு புறப்பட்ட அவர், இன்று காலை அங்கு சென்றடைகிறார்.
    மதுரை சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கிடையே அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 17-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    அதை தொடர்ந்து கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந் தேதி எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது. அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கிருந்து கருப்பணசாமி கோவிலில் இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அழகர்மலை நோக்கி புறப்பட்டார். தல்லாகுளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட அவர் அவுட்போஸ்ட், ரிசர்வ் லைன், புதூர், முன்றுமாவடி வழியாக இரவு அப்பன்திருப்பதியை சென்றடைந்தார். அங்கு விடிய, விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து மலைக்கு வழியனுப்பினர்.

    பின்னர் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர்கோவில் மலையை அடைகிறார். அங்கு அவரை பக்தர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கள்ளழகர் மலைக்கு சென்றதும் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
    ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது. அழகர் சூடுவதற்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மாலை நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் முடிவடைந்தவுடன் ஒரு கூடையில் வைத்து ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவி லாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, அழகரின் சித்திரை பெருந்திருவிழாவாகும்.

    இந்த திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை தொடங்கியது. இன்று (புதன் கிழமை) காலை சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்கப் பல்லக்கில் 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

    வழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி அன்று அதிகாலையில், புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிகொடுத்த திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.

    தொடர்ந்து காலை 7.25 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நடைபெறும்.

    20-ந் தேதி காலையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.

    பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெறும்.

    21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பூப்பல் லக்கு விழா நடைபெறும். 22-ந் தேதி இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.

    23-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    கள்ளழகர் எழுந்தருளும் 445 மண்டகபடிகளும் தயார் நிலையில் உள்ளது. அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தண்ணீர் பீய்ச்சும் வைபவத்தின்போது கள்ளழகர் மீது வேதிப்பொருட்கள் கலந்த நீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என்று கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

    இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை வந்தபிறகு கள்ளழகர் மீண்டும் 23-ந்தேதி இருப்பிடம் திரும்புவார். இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். இதில் பக்தர்கள் அவரவருக்குரிய வழக்கப்படி விரதமிருந்து இயற்கையான தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சாமி மீது தண்ணீர் பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறிய செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதிப் பொருட்களை கலந்து பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் சாமி, சாமியின் வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வேதி பொருட்கள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை பீய்ச்சுகின்றனர். இதுபோன்ற செயல் ஐதீகத்தை மீறும் வகையில் உள்ளன.

    எனவே எதிர்வரும் சித்திரை திருவிழாவில் செயற்கையான தோல் பையில் அதிக விசையான குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது. தண்ணீர் பாக்கெட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது. விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பைகளை பயன்படுத்தி, சிறிய குழாய் பொருத்தி வேதிப் பொருட்கள், திரவியம் ஏதும் கலக்காமல் சுத்தமான தண்ணீரை மட்டும் சாமி மீது பீய்ச்சி அடிக்க வேண்டும். இந்த தகவலை கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக 18-ந்தேதி மாலை 5.45 மணி அளவில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நிறைநாளில் காலை 8.15 மணி அளவில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்படுகிறார்.

    பொய்கைகரைபட்டியில் உள்ள கள்ளழகர் கோவில் தெப்பக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    பின்னர் தெப்பக்குளம் செல்லும் சாமியை, வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டி புஷ்கரணி தெப்பத்திற்கு சாமி சென்று, அங்கு கிழக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையடுத்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள்.

    கடும் வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பொய்கைகரைபட்டி தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் சாமி குளக்கரையை மட்டும் சுற்றி வருவார். பின்னர் அங்கிருந்து சாமி அதே பரிவாரங்களுடன் வந்த வழியாகவே கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருவார்.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kallalagartemple #MaduraiHC
    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘மதுரை கள்ளழர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பல சொத்துக்கள் தனி நபர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, கோவில் சொத்துக்களை மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை கள்ளழகர் கோவில் மற்றும் கோவிலைச் சேர்ந்த மலைப்பகுதியில் மது அருந்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகப்படிகள் உள்ளன? எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவற்றை நிர்வகிப்பது யார்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பிப்ரவரி 26-ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Kallalagartemple #MaduraiHC

    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி, கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருந்திருவிழா. இந்த வருடத்திற்கான விழா கோவிலில் வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.

    28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×