search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார்
    X

    மதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகர்மலைக்கு புறப்பட்ட அவர், இன்று காலை அங்கு சென்றடைகிறார்.
    மதுரை சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கிடையே அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 17-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    அதை தொடர்ந்து கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந் தேதி எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது. அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கிருந்து கருப்பணசாமி கோவிலில் இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அழகர்மலை நோக்கி புறப்பட்டார். தல்லாகுளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட அவர் அவுட்போஸ்ட், ரிசர்வ் லைன், புதூர், முன்றுமாவடி வழியாக இரவு அப்பன்திருப்பதியை சென்றடைந்தார். அங்கு விடிய, விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து மலைக்கு வழியனுப்பினர்.

    பின்னர் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர்கோவில் மலையை அடைகிறார். அங்கு அவரை பக்தர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கள்ளழகர் மலைக்கு சென்றதும் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×