என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus fire"

    • பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    குனியமுத்தூர்:

    பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாக வருவோர் என ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (27) என்பவர் ஓட்டுனராக இருந்தார். கண்டக்டராக கதிரேசன் (55) என்பவர் இருந்தார்.

    அதிகாலை நேரம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர் உள்பட 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

    காலை 8 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதை பார்த்த டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியானார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 40 பேரையும் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

    அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சின் முன்பகுதியில் எரிய தொடங்கிய தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகளும் எரிந்து விட்டன. பஸ் தற்போது பாதி எரிந்த நிலையில் உள்ளது.

    தகவல் அறிந்து செட்டிப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் எரிந்த பஸ்சை பார்வையிட்டனர்.

    பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.

    என்ஜினில் புகை வருவதை பார்த்ததும் டிரைவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 40 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    மன்னார்குடி போக்குவரத்து கழக பணிமனையில் அணைக்காமல் சென்ற வெல்டிங் கியாஸ் தீ பஸ்சில் பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் தப்பின.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை பணிமனையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் வேலை நடந்து கொண்டிருந்தன. இதற்காக வெல்டிங் தொழிலாளர்கள் பஸ்சுக்கு அடியில் வெல்டிங் அடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பஸ்சில் வெல்டிங் வேலை பார்த்த ஒரு தொழிலாளி திடீரென சாப்பிட கிளம்பி சென்றார். வெல்டிங் கியாசை அணைக்காமல் அவர் சென்றதால் அந்த தீ பஸ்சில் பிடிக்க தொடங்கியது.

    சிறிது நேரத்தில் தீ மளமள என்று பரவி வேகமாக பஸ்சின் மற்ற இடங்களில் பரவ தொடங்கியது. இதனால் அரசு பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் இந்த தீ விபத்து குறித்து மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அரசு பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரசு பஸ் முன்பக்க பகுதி எரிந்து நாசமானது.

    இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பணிமனையில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    ஊழியரின் கவனக் குறைவால் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் இரவு குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த பஸ் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    திடீரென்று அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் டயருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது பஸ்சுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த டிரைவர்-கண்டக்டர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் பஸ்சின் டயர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.

    அவர்களது சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் டயர் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அந்த பஸ்சுக்கு மாற்று டயர் பொருத்தப்பட்டு உடனே கடலூர் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அரசு டவுன் பஸ்சுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பரமசிவன் ஓட்டினார். கண்டக்டராக சின்னப்பன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 10 பயணிகளே பயணித்தனர்.

    அந்த பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வடக்கு தாழையூத்தில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் கையில் பெட்ரோல் கேன் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பரமசிவன் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்டினார். இதனால் பயந்து போன டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார்.

    இதையடுத்து பஸ்சில் ஏறிய மற்றொரு நபர் பயணிகளிடம் இந்த பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம், ஆகவே அனைவரும் இறங்கி சென்று விடுங்கள் என கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். பஸ் முழுவதுமாக கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி உடனடியாக தாழையூத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அரசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் பஸ்சுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து அடையாளங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×