என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crops Damaged"

    • இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும்.
    • மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல்

    கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டித்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டித்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழி பதிவாகியுள்ளது.

    பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    மேலும், 28.11.2025 அன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    மேலும், அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து.

    33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர்

    வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

    கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே, வருவாய் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பலவீனமான கரைப் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி அவற்றை பலப்படுத்துவதுடன், கனமழையால் ஆறு, ஏரி. வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வழிப் பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணிரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரு நாட்களாகப் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    கடந்த வாரம் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கெனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன். பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    எனவே, அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.
    • அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை தொடர்ந்து முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

    பயிர்கள் மூழ்கியது இதன் காரணமாக தஞ்சை அடுத்த அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

    இந்த வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலுர், புத்தூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.

    சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்களும் மூழ்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், வெள்ள பெருக்கு காரணமாகவும் மூழ்கிய பயிர்கள் அழுகும் சூழ்நிை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேப்போல் பட்டுக்குடி கிராமத்தில் ஈமகிரியை மண்டபமும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கால் மூழ்கியது.

    நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மட்டுமின்றி மற்ற பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிப்படைந்து வருவதால் அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, தெற்குமேடு, பகவதிபுரம், கற்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கார் பருவ நெல் பயிர்களில் அண்மையில் பெய்த அதிகப்படியான மழை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக நெற்கதிர்கள் வெளிவரும் தருவாயில் மகரந்த சேர்க்கை இல்லாமல் நெல் மணிகள் பதராகி மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் செந்திவேல் முருகன் வழிகாட்டுதலின்படி, அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஆறுமுகச்சாமி, மண்ணியல் பேராசிரியர் ஜோதிமணி, உழவியல் உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி, நோயியல் உதவி பேராசிரியர் ராம்ஜெகதீஷ், நெல்லை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராசா, துணை வேளாண்மை அலுலவர் ஷேக்முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் கொண்ட குழு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் நெல் பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அண்மையில் தொடர்ந்து பெய்த அதிகப்படியான மழை, அதிக வேகமான காற்றினால் நெற் கதிர்கள் வெளிவந்து பால் பிடிக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் மணிகள் அனைத்தும் பதராகி காய்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இப்பகுதியில் நெல் சாகுபடி செய்து நெற் கதிர்கள் பதராகி பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகள் விவரம் சேகரித்து கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பி உரிய நிவாரண தொகை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும் என்று வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×