search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI officials"

    மேற்கு வங்காள மண்ணை மம்தா களங்கப்படுத்தி விட்டார். சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை பாதுகாப்பவர்களை இந்த காவலாளி தப்ப விடமாட்டான் என்று பிரதமர் மோடி கூறினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட காண்டாமிருக பொம்மை நினைவுப்பரிசுடன் பிரதமர் மோடி.

    சுராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்’’ என்று கூறினார்.

    சத்தீ‌ஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீ‌ஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.

    அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?

    சத்தீ‌ஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?

    இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உ‌ஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிவிசி விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CVCinquiry #CBIVsCBI #AlokVerma
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்நிலையில், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ அதிகாரிகள் ஒருவர் மீது மற்றொருவர் கூறும் லஞ்ச புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முதலில் 10 நாட்களில் விசாரணையை முடிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் 10 நாட்கள் போதாது என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CVCinquiry #CBIVsCBI #AlokVerma

    சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர். #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges

    ×