search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi velli"

    • மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.
    • இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் சிவகாமிஅம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலைச் சுற்றி வயல்வெளிகளும், கரும்புத்தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் என இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. பூலாநந்தீஸ்வரருக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

    ஆடிவெள்ளியையொட்டி துர்க்கை அம்மன், சிவகாமிஅம்மன், பூலாநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது. இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • ஆடி கடைசி வெள்ளியன்று பெருந்திருவிழா நடைபெறும்

    இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கன்குடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி என்ற இடத்தில் உள்ள இக்கோயில், சிறியதாக இருந்தாலும் பெரும் புகழ் பெற்று விளங்கி வருகிறது.

    திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக சாத்தூரிலிருந்து நேர் கிழக்கே விளாத்திகுளம் வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.

    தல வரலாறு :

    சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் திண்டாடினாள். கூட்டம் கூடியது. அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே நிலைநாட்டி வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.

    அங்ஙனமே பூசாரிகள் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு தற்போதுள்ள அம்மன் திருவுருவத்தைக் கண்டெடுத்தனர். அச்சிலையை ஊருக்குள் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டார்கள்.

    மூன்று தினங்களில் மீண்டும் அச்சிறுமியின் மீது அருள் வந்து, தான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது என்றும், தூய்மையைக் கடைபிடிக்கும் பொருட்டு தனது திருஉருவத்தை பூமியைத் தோண்டி முன்பு எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் வைத்து வழிபடுங்கள் என்று கூறினாள். இதைத்தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோயில் அமைந்து உள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். அதுமுதல் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு திருக்கோயில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதன் ஞாபகார்த்தமாக அம்மனின் உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது. இருக்கன்குடி கோயிலுக்கு தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

    தல அமைப்பு :

    கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொன் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது.

    பிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் அனவீத்தும் நிறைவேறுகின்றன.

    தலச் சிறப்பு :

    குறை நிவர்த்தி வேண்டி திருக்கோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தீர்த்தங்கள் :

    வைப்பாறு, அர்ச்சுனா ஆறு

    திருவிழாக்கள் :

    இடுக்கண் களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கன்குடியில் கூடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.

    தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

    அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கன்குடி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தால் எண்ணிய வேண்தல்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஆடி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.

    அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும்.

    ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

    ஆடி வெள்ளிக்கிழமையான இன்று திருச்சி சமயபுரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    ஆடி மாதத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படும். தற்போது ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக  ஆடி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

    அதன்படி ஆடி வெள்ளிக்கிழமையான இன்று  திருச்சி சமயபுரம் மாரியம்மன்  கோவிலுக்கு  இன்று  காலையில்  இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் பலர் பல்வேறு ஊர்களிலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு பாத யாத்திரையாகவும் கோவிலுக்கு  வந்தனர். இன்னும் சில பக்தர்கள் அலகுகுத்தி , காவடி எடுத்தும் வந்து அம்மனை வணங்கி வழிபட்டனர்.  

    மேலும்  கோவில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் நின்றும் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆடிபெருக்கையொட்டி காவிரி ஆற்றில் புனிதநீராட  பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சிக்கு வந்தனர். அவர்களும் சமயபுரம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    ×