search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saving"

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்
    • மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.

    தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.

    * மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.

    * சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.

    * வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    * வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

    * வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.

    * பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

    * இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.

    * அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.

    * மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

    • விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
    • . இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தொடங்கி வைத்தார்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி கம்சு தொடங்கி வைத்தார். முன்னதாக அனைவரையும் மக்கள் தொடர்பு ஆய்வாளர் தங்க ராஜ் வரவேற்றார். தலைமை அஞ்சலக உதவி அதிகாரிகள் சாதிக்பாஷா , ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மத்திய அரசு அறிவித் துள்ள பிரத்யேக சிறு சேமிப்பு திட்டத்திற்கு, 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் மகளிர் அல்லது சிறுமிகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். மகிளா சேமிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் அல்லது சிறுமிகள் பெயரில் மட்டுமே சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்க முடியும். மேலும்தொடர்ந்து, 2025-ம் ஆண்டு வரும் வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் வசதியும் உள்ளது. நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் அமுதா, பிரியா விழுப்புரம் மாவட்ட சிறப்பு சிறுசேமிப்பு முகவர் மதுரை வீரன் மற்றும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும்.
    • சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். நாம் சேமித்து வைக்கும் சிறிய தொகையும் ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயம் கைகொடுக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி 'உலக சேமிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரை இல்லாத வீட்டுக்கு சமம். அத்தியாவசிய தேவைகளை தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்கால பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும்.

    ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தை பெற்ற உடன், செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கட்டாயம் சேமிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கும் சேமிப்பின் அவசியத்தை சிறு வயதிலேயே சொல்லி கொடுக்க வேண்டும். சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய பணம் வீணாகாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார நிலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும். இப்பழக்கமானது ஆடம்பர செலவுகளை குறைக்க கற்று தருகின்றது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வழிவகை செய்கின்றது.

    மனிதர்கள் இளம் வயதில் அதிகமாக உழைக்க இயலும், ஆனால் முதுமையில் உழைக்க உடலில் சக்தி இருக்காது. எனவே உழைக்கும் காலத்தில் சிறுதொகையை சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் அது உதவும். எறும்புகள் கூட தனக்கான உணவை கோடையில் சேமித்து வைக்கும், பின்பு மழை நாட்களில் சேமித்த உணவை உண்டு உயிர் வாழுகிறது. ஓர் எறும்புக்கு கூட சேமிப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.

    அதுபோல் மனிதர்களாகிய நாம் சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. அரசு சிறு சேமிப்பு நிலையங்கள், அரசு வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவற்றில் பணத்தை சேமிக்கலாம். நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. சேமிப்பு பழக்கமும், சிக்கனமும் இருந்தால்தான் ஒருவர் வாழ்வில் உயரத்தை அடைய முடியும்.

    சிக்கனம் சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும். சேமிப்பு வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. எனவே அனைவரும் சிக்கனத்தை பின்பற்றி சேமிக்க பழகுவோம்.

    • பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.
    • பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.

    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டிய நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

    சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.

    • 'நேரம்' என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும்.
    • உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள்.

    புது ஆண்டில் நிதி சார்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களை பெருக்கி, தடைகளை ஆராய்ந்து நீக்குபவர்களிடம்தான் செல்வம் பெருகும். அந்த வகையில் உங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    1. காப்பீடு திட்டங்களில், குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் உங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்த முடிவு. எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் சில மருத்துவச் செலவுகளை கையாள்வதற்கு இது உதவி செய்யும். மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுப்பதற்கு முன்பு அதன் நிறை-குறைகளை ஆராய்ந்து பார்த்துவிட வேண்டும்.

    2. முதலில் உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள். சில நாட்கள் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக அல்லது குறைவாக செலவு செய்ய நேரிடலாம். இருப்பினும் உங்கள் ஒரு நாளுக்கான வரவு-செலவு எவ்வளவு என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெரியாமல் செய்யும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.

    3. அலைபேசி, இருசக்கர வாகனம் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உள்ள எந்தப் பொருளிலும் பணத்தை வீணாக்குவது, நிதி அபாயங்களில் உங்களை சிக்க வைக்கலாம்.

    4. சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்க ஆர்வம் கொள்வது நல்லது. வாங்கும் போது சற்று அதிகம் செலவழிக்க நேர்ந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    5. 'பட்ஜெட்' என்ற ஒன்றை பெயர் அளவில் வைத்துக் கொண்டு, தங்களின் விருப்பப்படி செலவு செய்பவர்கள் அதிகம். நீங்கள் திட்டமிடும் 'பட்ஜெட்', நடைமுறையில் கடைப்பிடிக்க சாத்தியமாக இருக்க வேண்டியது அவசியம்.

    6. உங்கள் செலவுகள் போக மீதம் இருக்கும் வருமானத்தை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும். வங்கி சேமிப்பு, முதலீடு, பகுதி நேர தொழில் செய்வது போன்றவற்றுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.

    7. மாதத் தவணைகள், கடனுக்காக செலுத்தப்படும் வட்டிகள் ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும். முடிந்தவரை வட்டியை குறைக்க வேண்டும் அல்லது கடனை முழுவதாக அடைக்க வேண்டும். இல்லையெனில், ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றும் கதை போல் வருமானம் வீணாகும்.

    8. 'நேரம்' என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிப்பவர்கள் நேரத்தை சேமித்து வையுங்கள். இழந்த பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை திரும்ப பெற முடியாது. எனவே புது ஆண்டில் நேர மேலாண்மையை கட்டாயம் பின்பற்றுங்கள். இதனால் ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்ய முடியும்.

    • வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள்.
    • சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.

    எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.

    எனவே வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப்புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என பரிசோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். அறைகளுக்கு அவசியமாக ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கை ஒளிரவிட வேண்டிய தேவை இருக்காது.

    குளிர்சாதன வசதியை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்க போதுமான குழாய் வசதி அமைத்திருக்க வேண்டும். மின் சாதனங்களுக்கான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்கு குடிபோகும் முன் கவனிக்க வேண்டியவை..பெரும்பாலும் வீட்டை தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ், மார்பிள், கிரானைட் அகியவற்றில் எது பதிக்கப்பட்டு இருக்கிறது? என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம்.

    ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா? என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்த பின்பே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உள்புறம் திருப்திகரமாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ்.

    இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ். இந்த அமைப்பு பண்டமாற்றுக் காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது வியப்புக்குரியது. இத்தகைய சேமிப்பு திட்டத்தை பற்றி சிட் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிற்றரசு கூறியதாவது.

    பண்டமாற்று காலத்திலேயே சேமிப்புக்காகவும் சிலரின் அவசர தேவைக்கு உதவுவதற்காகவும் இந்த அமைப்பு வழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. நாணயம் பணம் புழக்கத்திற்கு வந்த பின்பு சிட் பண்ட் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பே செயலுக்கு வந்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. 1894-ம் ஆண்டு ஆவணங்கள் மற்றும் 1934-ம் ஆண்டு திருவாங்கூர் சிட்ஃபண்ட்ஸ் சட்டம் மூலம் இத்தகைய நிதி அமைப்பு சட்டத்தால் முறைமை படுத்தப்பட்டு வந்துள்ளது.

    சுதந்திரம் அடைந்து மாகாணங்கள் தனித்தனியாக உருப்பெற்ற உடன் 1961-ம் ஆண்டு சிட் பண்ட் சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. மேலும் செம்மைப்படுத்தி சீர்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு சிட்ஃபண்ட் சட்டத்தை கொண்டு வந்தனர். இது இந்தியா முழுமைக்கான சட்டமாக இருந்தது. இதை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. மாநில அரசின் பதிவு துறையே இதையும் கவனித்துக் கொள்கிறது, இவ்வேளையை செய்பவரை ரிஜிஸ்டார் ஆப் சீட்ஸ் என அழைக்கப்படுகிறார்.

    சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிட்டு நிறுவனம் புதிதாக ஒரு சீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகைக்கு சீட் ஆரம்பிக்க உள்ளார்களோ அந்த குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக ஆர்பிஐ வங்கியில் செலுத்தி சீட்டு நடத்த அனுமதி பெற வேண்டும் அதற்கு பின்னர் எவ்வளவு நபர்கள் அந்த சீட்டிற்கு தேவையோ அத்தனை நபர்களை சேர்த்த பின்னால் அந்த சீட்டை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்றே சீட்டை ஆரம்பிப்பார்கள். இதனால் நிறுவனங்கள் நடத்துகின்ற சீட்டுகளில் சேர்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    சீட்டு நிறுவனங்கள் சட்டப்படி வட்டிக்கு பணம் கொடுப்பதோ வைப்புத் தொகையாக பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டிக் கொடுப்பதோ கூடாது என சட்டம் உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுக்கின்ற நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகும் போது அதை சீட்டு நிறுவனங்கள் என்ற தவறான புரிதலில் இருந்து மக்கள் இப்பொழுது பெருமளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் இருப்பதே இதன் சிறப்பு.

    வங்கிகள் அரசு நிதி நிறுவனத்திலிருந்து பணத்தைப் பெற்று பொதுமக்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறது. ஒரு வகையில் பார்த்தால் சீட்டு கம்பெனிகள் அரசு நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கடனாக பெறாமல் தாங்கள் வைப்பு நிதியாக அரசு நிதி நிறுவனத்திற்கு செலுத்தி விட்டு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும்படி நிதி உதவி கிடைக்க செய்வதை பாராட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனும் சிற்றரசு அவர்கள், மத்திய அரசு இந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சட்டங்களை மாற்றி அமைத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய நிதி ஆதார அமைப்பு பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • சேமிப்பில் செய்யும் சில தவறுகள், உங்களது சேமிப்பு கணக்கை மாற்றியமைத்துவிடும்.
    • சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும்.

    சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நினைத்தபடி எல்லோருக்கும் சேமிப்பு அமைந்துவிடுவதில்லை. சிலர் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே சேமிக்கிறார்கள். சிலரது சேமிப்பு கரைந்தே போய்விடும். காரணம், சேமிப்பில் செய்யும் சில தவறுகள், உங்களது சேமிப்பு கணக்கை மாற்றியமைத்துவிடும். அந்த வகையில் சேமிப்பு நுணுக்கங்களை சென்னையை சேர்ந்த மேக்ஸிடோம் சுப்பிரமணி, விளக்குகிறார். அத்துடன் உங்களது சேமிப்பு எவ்வளவு வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதையும் விளக்குகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

    * எது சேமிப்பாக கருதப்படும்?

    உங்களது அன்றாட வாழ்க்கைக்கு போக மீதமிருக்கும் சிறுபணமும், பெரிய சேமிப்புதான். மாத சம்பளக்காரர்கள் என்றால், அடுத்த சம்பளம் வரும்வரை தனது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு போக மீதமிருக்கும் பணம்தான் சேமிப்பு. ஆனால் அத்தியாவசிய தேவைகளை சுருக்கிக்கொண்டு சேமிப்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோல அனாவசியமாக செலவழிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    * எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம்?

    கடுகு டப்பாவில் பணத்தை வைப்பதுகூட சேமிப்புதான். ஆனால் நீங்கள் சேமிக்கும் பணம், சேமிக்கும் அளவை விட கூடுதலாக கிடைத்தால்தான் லாபகரமான சேமிப்பாக அமையும். அந்தவகையில் இன்சூரன்ஸ், பிக்ஸட் டெப்பாசிட், ஆர்.டி., வங்கி கணக்கு, தபால் நிலையம், தங்கம்-வெள்ளி, பங்கு சந்தை, மியூட்சுவல் பண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி சேமிக்க நிறைய வழிகள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும், குறிப்பிட்ட வட்டி விகிதம்/முதலீட்டு காலத்தை அடிப்படையாக கொண்டு, சேமிப்பை இரட்டிப்பாக்குகிறது. இதில் உங்களுக்கு தேவையான, பழக்கமான வழிகளில் சேமிக்க பழகுங்கள்.

    * பணத்தை விரைவாக இரட்டிப்பாக்கும் சேமிப்பு தளம் எது?

    பங்கு சந்தை போன்ற ரிஸ்க் அதிகமாக இருக்கும் எல்லா சேமிப்பு தளங்களும் சேமிப்பை வெகுவிரைவாக இரட்டிப்பாக்கும். அதேசமயம் சிறுதவறு செய்தாலும் உங்களது சேமிப்பை வெகுவிரைவாகவே கரைக்கக்கூடும்.

    * சேமிக்கும் விஷயத்தில் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

    சேமிக்கும் விஷயத்தில் 'ரூல் ஆப் 72' ரொம்ப முக்கியம். 'ரூல் ஆப் 72' என்பது, நீங்கள் சேமிக்கும் தொகை, எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும் என்பதை விளக்கும் பார்முலா. உதாரணத்திற்கு, உங்கள் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் பணத்தை சேமித்திருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். வங்கி வட்டிவிகிதம் 7 சதவீதமாக இருந்தால், அது ரூ.2 லட்சமாக இரட்டிப்பாக 10 வருடம் 3 மாதங்களாகும். (72/7) 72/காலம் அல்லது வட்டிவிகிதம் என்பதுதான், இந்த பார்முலா.

    இந்த 'ரூல் ஆப் 72' பார்முலாவை பயன்படுத்திதான், எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து எவ்வளவு காலத்தில் திரும்ப பெறலாம் என்பதை வல்லுநர்கள் தீர்மானிக்கின்றனர்.

    * சேமிப்பு பழக்கத்தில் தவிர்க்க வேண்டியவை எவை?

    சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும். கையில் இருக்கும் கடன் சுமைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் கடன், சேமிக்க வழிவகையே தராது. 'ரூல் ஆப் 72' படி, வங்கி கடன் அட்டை உங்களது 1 லட்சம் ரூபாய் கடனை, 2 வருடங்களிலேயே ரூ.2 லட்சமாக மாற்றிவிடுவதை விளக்குகிறது.

    * எந்தெந்த வயதினர், எந்தெந்த வழிகளில், எவ்வளவு தொகை சேமிக்கலாம்?

    புதிதாக வேலைக்கு செல்ல தொடங்கியிருக்கும் இளைஞர்கள், சின்ன தொகையை சேர்த்து வைக்க பழகலாம். குறிப்பாக பங்கு சந்தைகளில், முதலீடு செய்யலாம். அது 10 வருடங்களில் பெரிய முதலீடாக வளர்ந்திருக்கும். குடும்ப தலைவர்கள், 5 வருடங்களில் பலன் தரக்கூடிய குறுகிய கால மியூட்சுவல் பண்ட்ஸில் சேமிக்கலாம். பெண்கள் வழக்கம்போல தங்கத்தில் முதலீடு செய்வது, நகையாக அணிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் கொடுக்கும். நல்ல முதலீடாகவும் அமையும்.

    * பங்குசந்தை இளைய தலைமுறையினருக்கு நன்மை பயக்குமா?

    பங்கு சந்தை பற்றி குறுகிய கால படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதை படிப்பதும் சிறந்த முதலீடுதான். உங்கள் வருமானத்தை பெருக்க இவை கைக் கொடுக்கும். இது உங்களது 2-வது வருமானத்தை உருவாக்கிக் கொடுக்கும்.

    மேக்ஸிடோம் சுப்பிரமணி

    • பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும்.
    • மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள்.

    பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியுடன் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நடைமுறை கல்வியும் பல பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. சேமிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நேரடி வங்கி அனுபவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது, கர்நாடகாவில் இயங்கும் ஒரு அரசு பள்ளி. மாணவர்களே நடத்தும் அந்த வங்கியில் பணம் சேமித்தல், முதலீடு செய்தல், டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    பெங்களூரு அடுத்த முள்ளூரில் இயங்கும் அரசு பள்ளியில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 39 வயதாகும் பள்ளி ஆசிரியர் சி.எஸ். சதீஷ் இந்த வங்கியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சதீஷ், வங்கியல் பணி பற்றிய அத்தியாவசிய நடைமுறைகளையும், பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்பினார். அதனை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு வங்கியை நிர்வகிப்பதுதான் சரியான நடைமுறை என்று முடிவு செய்தவர் பள்ளியிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.

    ஸ்கூல் பேங்க் ஆப் முள்ளூர் (எஸ்.பி.எம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வங்கியில் மாணவர்கள் சேமித்தல், காசோலை நிரப்புதல், பணத்தை வரவு வைத்தல், பணத்தை திரும்பப் பெறுதல், வட்டி பெறுதல் போன்ற செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 37 மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.''

    குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த வங்கிப்பணிகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பணத்தை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்கிறார், ஆசிரியர் சதீஷ்.

    மாணவர்கள் தாங்கள் எவ்வளவு பணம் சேமிக்கிறோம், தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை திரும்ப எடுத்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பாஸ்புத்தகமும் வழங்கப்படுகிறது. பணம் எடுக்க விரும்பினால் வங்கியில் நடைமுறையில் இருப்பதுபோல் செல்லானை நிரப்பி கொடுத்து பணத்தை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் இந்த வங்கிக்கு, வங்கிகளில் இருப்பது போலவே மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் லாக்கர் வசதியும் உள்ளது.

    "பள்ளிக்கூடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய பாஸ் புத்தகத்துடன் வருகிறார்கள். நாங்கள் ஒரு சீட்டை நிரப்ப கொடுப்போம். அதில் பணத்தை நிரப்பி கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் பணம் காசாளர் வித்யாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதை டெபாசிட் செய்வார்"என்கிறார், பள்ளி வங்கியின் மேலாளராக இருக்கும் தன்வி.

    மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் 100 ரூபாய் சேமித்தால் அவருக்கு பென்சில் பரிசாக வழங்கப்படும். 200 ரூபாய் சேமித்திருந்தால், போனஸாக பேனா கிடைக்கும். 300 ரூபாய் சேமித்தால் ஒரு நோட்புக்கை பெறுவார்கள். 500 ரூபாய் சேமித்ததும் 5 சதவீத வட்டி வழங்கப்படும். அவர்களின் சேமிப்பு தொகை ஆயிரம் ரூபாயை கடந்தால் அவர்களின் உண்மையான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

    ''இதுநாள் வரை பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தை நொறுக்குத் தீனிகளுக்கு செலவிட்டார்கள். இப்போது வங்கி அனுபவத்தை வழங்குவதோடு, சேமிப்பு மனப்பான்மையையும் எங்கள் பள்ளி வங்கி ஊக்குவித்து வருகிறது" என்கிறார் சதீஷ். மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை சுற்றுலா, பள்ளி ஆண்டு விழா, எழுது பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவிடுகிறார்கள்.

    மாணவி ஸ்ரீஷ்மா கூறுகையில், ''நான் 45 ரூபாயைச் சேமித்துள்ளேன். இன்னும் கூடுதலாக சேமித்து பள்ளியின் வருடாந்திர சுற்றுலா பயணத்திற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார். தன்வியின் தாயார் குலாபி கூறுகையில், ''குழந்தைகள்இடையே பெரிய வித்தியாசத்தை பார்க்கிறேன். வீட்டில் கொடுத்தனுப்பிய பணத்தை முன்பு சாக்லேட்கள், குளிர்பானங்கள் மற்றும் பிற நொறுக்கு தீனிகளுக்கு செல வழித்தனர். இப்போது வங்கியில் டெபாசிட் செய்ய பணம் கேட்கிறார்கள். பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பள்ளி சுற்றுலா பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளுக்கு இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்.

    • தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
    • பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா்.

    உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந்தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றனா்.

    அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைளகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.

    இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

    இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

    தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.

    பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...

    • குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.

    குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:

    சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:

    குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

    ஊக்கத்தொகை வழங்குங்கள்:

    நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.

    பணம் சம்பாதிக்கும் வழிகள்:

    குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

    பண இலக்குகள்:

    குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.

    ×