search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "donate"

    • நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடு.
    • விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை.

    இதற்காக, நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்கினர்.

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

    நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார்.

    நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.

    • தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைப்பார்கள்.
    • பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.

    பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக் கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.

    அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.

    • தர்மம் என்றால் நல்லொழுக்கம்
    • நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம்.

    நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுக்கு நாம் தருவதை 'தானம்' என்று சொல்லலாம். நம்மைவிட வசதி குறைந்தவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை 'தர்மம்' என்று சொல்லலாம்.

    நெருப்பின் தர்மம் சுடுவது, நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும்போது, இங்கு 'இயல்பு' என்ற பொருளிலேயே தர்மம் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். 'தானம்' என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது.

    தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல்; தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம்.

    பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார்.

    கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார். இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது. தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

    புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.... ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.

    அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ? என்றார் கண்ணன்.

    • ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார்.
    • திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது.

    ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான்.

    வெயிலில் மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார். அதைப்பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான். பின் அவன் தன் வழியே திரும்பியபோது ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது.

    அப்போது எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்து, இந்த வேடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகிவிட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அந்த திருடனின் உயிரைக்கொண்டு சென்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாசி மாத தானம். எனவே தானம் செய்யுங்கள்.

    • ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
    • வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.

    ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

    நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    • 20-05-2023 முதல் 18-06-2023 வரை ஸ்ரீ மகா விஷ்ணுவை பூஜை செய்து வழிபட வேண்டும்.
    • ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.

    வைகாசி மாத வளர்பிறை பிரதமை முதல் ஆனி மாதம் அமாவாசை வரை (20-05-2023 முதல் 18-06-2023 வரை) ஸ்ரீ மகா விஷ்ணுவை திரிவிக்ரம மூர்த்தியாக பூஜை செய்து வழிபட வேண்டும்.

    இந்த நாட்களில் தினமும் தானங்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.

    சற்று வசதி இருப்பவர்கள் பனை ஓலையால் செய்த விசிறி, வாசனை உள்ள சந்தனம் ஆகியவற்றை இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் அல்லது கடைசி 3 நாள் அல்லது ஏதாவது ஒரு நாளாவது தானம் செய்யலாம்.

    இதனால் திரிவிக்ரம சுவரூப மகாவிஷ்ணு மகிழ்ச்சி அடைவார்.

    இதனால் ஸ்ரீ மகாபலிக்கு அருளியதைப்போல் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் பகவான் ஏற்றுக்கொண்டு அருள் புரிவார்.

    • 22.4.23 முதல் 19.5.23 வரை தண்ணீர் தானம் செய்யுங்கள்.
    • தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    கோடை வெயில் மிக கடுமையான உக்கிரமாக உள்ளது. இதை அறிந்தே நம் முன்னோர்கள் இந்த சீசனில் தண்ணீர் தானம் செய்ய வேண்டும் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிடச் சிறந்தது உதகதானம் என்னும் தண்ணீர் தானம். அதுவும் வெயில் நாட்களான சித்திரை, வைகாசி மாதங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தாகத்திற்கு தண்ணீர் தருவது மிகப்பெரும் புண்ணியம் தரும்.

    22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரை அல்லது ஏதாவது 3 நாளாவது வசதியிருக்கும் அனைவரும் அவரவர் வசிக்கும் தெருவிலோ அல்லது தன் வீட்டு வாசலிலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொண்டு தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும். இது அனைத்து பாபத்தையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மையை தம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துமாறு தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.

    இந்த தானம் செய்பவர்களின் தந்தை, தாத்தா, அம்மா, பாட்டி முதலிய முன்னோர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் அமைக்க முடியாதவர்கள் ஒரு குடம் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை நினைத்து தானம் செய்ய வேண்டும். இதனால் நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும்.

    இவ்வாறு கோடை காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு குடம் தண்ணீர் தானம் செய்யலாம் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு நாளாவது 12, 6, 3 என்ற எண்ணிக்கையில் குடம் தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    • யூதர்கள் செய்யவேண்டிய மிக முக்கிய செயல்களில் ஒன்று தர்மம் செய்தலாகும்.
    • மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.

    உங்கள் விண்ணப்பம் இறைவனை நோக்கிப் பறந்திட விரும்புகிறீர்களா?

    அதற்கு இரண்டு இறக்கைகளை உருவாக்குங்கள்: 'ஒன்று நோன்பு, மற்றொன்று தர்மம் செய்தல்' என்கிறார் தூய அகஸ்டின் அவர்கள்.

    தவக்காலங்களை ஆசரிக்கின்ற இறைமக்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று கடமைகள் தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பு இருத்தல் என்பவைகளாகும். இவைகளில் 'தர்மம் செய்தலை' (மத்தேயு 6:1-4) ஆண்டவர் இயேசு முதன்மையானதாகக் குறிப்பிடுகிறார்.

    யூதர்கள் செய்யவேண்டிய மிக முக்கிய செயல்களில் ஒன்று தர்மம் செய்தலாகும். இது இறைவேண்டல், மனந்திரும்புதலைப் போன்று பாவத்திற்கான பரிகாரங்களில் ஒன்று.

    இறைமக்களின் தர்மம்

    யூதர்களின் நூலான மிஷ்னா தோராவில் (அதிகாரம் 10:7-14) ஏழைகளுக்குக் கொடுப்பது பற்றிய பல்வேறு சட்டங்களைக் காணலாம். பெறுபவர் தன்னிறைவு அடையும்படி கொடுத்தல், கொடுத்தலும், பெறுதலும் அடையாளம் தெரியாமல் இருத்தல், கேட்பதற்கு முன், கேட்டவுடன் கொடுப்பது, கெஞ்சாமல் கொடுப்பது, குறைவாயினும் மகிழ்ச்சியுடன் கொடுப்பது. ஏழைகளுக்கு தர்மம் செய்தலை இஸ்ரவேலருக்கு கட்டளைகளாகவே கடவுள் கொடுத்திருக்கிறார்.

    'நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும் போது, வரப்பு ஓரக்கதிரை அறுக்க வேண்டாம். அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டுவந்தால், அவற்றை எடுக்கத் திரும்பிப்போகாதே. திராட்சைத்தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம். சிந்திக்கிடக்கும் பழங்களைப் பொறுக்கவேண்டாம்'. (லேவியர் 19:9,10).

    'ஒலிவ மரத்தை உதிர்க்கும்போது உதிராததைப் பறிக்காதே. அவற்றை எல்லாம் எளியோருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டில், விளைச்சலில் பத்திலொரு பாகத்தையும் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடையும்படி அவர்களுக்கு கொடு' என்கிறார்.

    'மன்னர் அகஸ்வேரின் காலத்தில் பூரிம் பெருவிழாவில் இஸ்ரவேலர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற பெருமகிழ்வைக் கொண்டாடும் போதும் ஏழைகளுக்கு உணவளிக்கவும் திட்டமிட்டார்கள்'. (எஸ்தர் 9:22).

    மறைவாகச் செய்வோம்

    ஆண்டவர் இயேசு, இறைவன் விரும்புகிற தர்மம் செய்தலைக் குறித்து மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

    மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். ஏனெனில் உங்கள் விண்ணகத் தந்தையிடம்இருந்து உங்களுக்கு கைம்மாறு கிடைக்காது என எச்சரிக்கிறார். 'நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள். மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரரைப் போல் தொழுகைக்கூடங்களிலும், சந்துகளிலும் நின்று தர்மம் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள்'. (மத்தேயு6:1,2)

    அன்பில்லாமல் ஒருவர் தனக்குண்டானவைகளை எல்லாம் அன்னதானம் செய்ய முடியும். தர்மப்பிரபு, தயாளன் என்றெல்லாம் பெயரெடுப்பதே இச்செயலின் உள்நோக்கமாகும்.

    அப்படிப்பட்ட செயல் கொடுப்பவருக்குப் புகழ்ச்சியாகவும், அதே சமயத்தில் பெற்றுக்கொள்பவரின் கண்ணியத்துக்கும் சுயமரியாதைக்கும் இழுக்காகவும் அமையும்.

    ஆனால் ஏழைகளின் கண்ணியம், சுயமரியாதை காக்கப்பட வேண்டுமாதலால் இச்செயல்கள் ரகசியமாயிருத்தல் அவசியம்.

    ஆதலால் தான் ஆண்டவர் இயேசு, "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்கிறதை இடக்கை அறியாதபடி செய்யுங்கள். உங்கள் தர்மம் மறைவாயிருந்தால், மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத்தேயு 6:3,4) என்கிறார்.

    மறவாமல் செய்வோம்

    'அன்றியும் நன்மை செய்யவும், தான தர்மம் பண்ணவும் மறவாதீர்கள். இப்படிப்பட்ட பலிகளின் மேல் கடவுள் பிரியமாயிருக்கிறார்'. (எபி 13:16).

    திருச்சபை வரலாற்றின் தொடக்க நாட்களில் திருத்தூதர்கள் இத்திருத்தொண்டை மிகச் சிறப்பாக செய்தனர். திருத்தூதர் பவுலும், பர்னபாவும் தர்ம ஊழியத்தை செய்தனர். கைம்பெண்கள், ஏழை-எளியோர் அன்றாடம் கவனிக்கப்பட வேண்டுமென்று தான் திருச்சபையின் மூப்பர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். தர்மசகாயம் செய்யவும், தர்ம ஊழியத்தைத் தாங்கவும் திருத்தூதர் பவுல் பல திருச்சபை மக்களை கேட்டுக் கொள்கிறார்.

    மக்கதோனியா நாட்டுத் திருச்சபையார் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே, மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்தார்கள். நாங்கள் நினைத்ததற்கு மேலாகவும் கொடுத்தார்கள்.

    'மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்ம காரியத்திலும் பெருகவேண்டும்'. (2 கொரிந்தியர் 8:2-3,7)

    இத்திருத்தொண்டினால் பல இறைமக்களின் தேவை நிறைவு செய்யப்படுகிறது. பலர் நன்றி யின் நிறைவாக கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள். அவர்கள் உங்கள் மீது நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர் என கொரிந்து நகர மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

    இறைமகன் இயேசு நம் வாழ்வின் மீட்புக்காய் கொடுக்கப்பட்ட மாபெரும் அருட்கொடை. பிறருக்கு கொடுப்பதால் இறைவன் நமக்குத் தருவார் என்ற எதிர்பார்ப்போடல்ல, நம் வாழ்வு, நல்வாழ்வு, நல்பாதுகாப்பு யாவும் இறைவன் நமக்குத் தந்துகொண்டிருக்கிற பெருங்கொடை என்ற நன்றியுணர்வுடன் தர்மம் செய்வோம்.

    அருட்பணி.ம.பென்னியமின், தோட்டப்பாளையம், வேலூர்.

    • இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை
    • உங்களுடைய கர்மாவும், பாவமும் இரட்டிப்பாக உயரத்தான் செய்யும்.

    இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்திலெல்லாம் தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது. தானத்தினை முறையாக எப்படி செய்யவேண்டும். எப்படி செய்யக்கூடாது. தவறான தானத்தின் மூலம் நமக்கு பாவம் வந்து சேருமா? எப்படிப்பட்ட தானங்கள் தவறான தானங்களாக சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிய பார்க்கலாம்.

    முதலில் முறை தவறிய தவறான தானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு ஒரு பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கின்றோம். அந்த பசு மாட்டை நாம் யார் கையில் தானமாக கொடுக்கின்றோம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பசு மாடு வளர்க்க தெரியாதவனுக்கு இந்த பசு மாட்டை வாங்கி தானமாக கொடுத்தால், அவன் என்ன செய்வான்? இந்த கையில் வாங்கிய பசு மாட்டை, அந்த கையில் வேறு ஒருவனுக்கு விற்று விட்டு சென்று விடுவான். போக கூடாதவர் கையில் பசுமாடு சென்று, அந்த பசு மாட்டிற்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விட்டால், அந்தப் பாவம் நம்மை தான் வந்து சேரும். நீங்கள் தவறான ஒருவரிடம் பசு மாட்டைப் தானம் பிடித்துக் கொடுத்ததால் தானே, பசுமாட்டிற்கு இந்த நிலைமை. பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்துள்ளார்கள்.

    நீங்கள் ஒரு தானத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால், அந்த தானத்தின் மூலம் தானம் பெற்றவர் முழுமையாக பயனை அடையவேண்டும். அதன் மூலமே நம்முடைய பாவங்கள் குறைக்கப்படும். நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்படும். தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

    ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பெண்ணை கன்னிகா தானம் செய்து விட்டோம் என்பதற்காக அந்தப் பெண்ணின் நல்லது கெட்டதை நாம் பார்க்காமலேயே இருக்கின்றோம். கடைசிவரை அந்த பெண் புகுந்த வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை கன்னிகாதானம் செய்து கொடுத்த பெற்றவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். முறையான தானமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். நமக்கு உபயோகமில்லாத நாம் பயன்படுத்தாத சில பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கின்றோம். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் உடுத்திய துணி, நல்ல துணியாக இருக்கிறது என்றால் அதை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். எப்படி? அந்த துணிகளை நன்றாக துவைத்து, வெயிலில் உலர வைத்து, மடித்து கொஞ்சமாக மஞ்சள் வைத்து அந்தத் துணியை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

    பழைய துணிகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்கும்போது அது தானத்தின் வரிசையில் வராது. இதை தானம் என்று சொல்ல வேண்டாம். உங்கள் கையால் அந்த பழைய துணிகளை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம். சுத்தப்படுத்திய பழைய துணியை பையில் போட்டு, அந்த பையை கீழே வைத்து விட வேண்டும். அதை கஷ்டப்படும் அந்த குறிப்பிட்ட நபர் எடுத்துக் கொள்ளட்டும். இது நீங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யக் கூடிய சிறிய உதவி.

    ஒருவேளை நீங்கள் உடுத்திய துணியை துவைக்காமலோ, அல்லது கிழிந்து இருக்கக்கூடிய துணிகளையோ தானம் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பாவம் தான் வந்துசேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு இவைகளை புதியதாக வாங்கி தானமாக கொடுங்கள். முக்கியமாக நாம் கொடுக்கப்படும் தானம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பயன்பட வில்லை என்பதற்காக, நாம் பயன்படாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கி தானமாக கொடுப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதன்மூலம் நமக்கு பலனும் கிடைக்காது.

    ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து தான் இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் தானம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றோம். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உண்மையான மனதோடு அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்தவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

    • சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை.
    • ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும்.

    நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் படி சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற நிலைக்கு ஏற்ப அதன் தசா புக்திக்கு காலங்களில் சுப, அசுப பலன்கள் ஏற்படுகின்றன.

    நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கோவிலை நோக்கி புறப்படுகிறார்கள். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. அதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழி நடத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட எளிய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    சூரியன் தோஷம்

    சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும் . கோதுமை உணவு சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்ய வேண்டும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாணிக்க மோதிரம் அணிய வேண்டும்.

    சந்திர தோஷம்

    சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும் பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.

    வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

    வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பதி சென்று வெங்கடா சலபதியை தரிசிக்கலாம்.

    பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    முத்து மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம் செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    துர்கா கவசம் படிக்க வேண்டும்.

    வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம்

    செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பசு தானம் செய்ய வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவள மோதிரம் அணிய வேண்டும்.

    புதன் தோஷம்

    புதன்தோஷம் நீங்க புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். புதன் கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். விஷ்ணு சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.

    குரு தோஷம்

    இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும் யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும்.

    வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கி ழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும். கனக புஷ்பராக கல்லில் மோதிரம் அணியலாம் சுக்கிரன் தோஷம் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தர வேண்டும். வைர மோதிரம் அணிய வேண்டும்.

    சனி தோஷம்

    சனி தோஷம் விலக சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். சனி தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தில் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு. நீலக்கல் மோதிரம் அணிய வேண்டும்.

    ராகு தோஷம்

    இத்தோஷம் நீங்க ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். கும்பகோணம் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி வழிபாடு துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.

    கேது தோஷம்

    தோஷம் விலக கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். விநாயகர் ,ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும் அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட்டால் இன்னல் தீரும்.

    • பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
    • இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    முருக பக்தர்கள் திருவிழாக்களில் பழனிக்கு வேண்டுதலை மட்டும் முருகனிடம் வைக்காமல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை கண்டு வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கும், ஆயுள் பெருகும். விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும்.

    அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண்குழந்தையாகி பிறப்பான் என்பது ஐதீகம். பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதற்கான கல்வெட்டுகள் பல விளக்குகின்றன. நிலங்களை காணிக்கை போன்று தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.

    வேலின் மகத்துவம்

    முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலை விட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுபவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

    • ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
    • ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல்.

    தானங்களில் சிறந்த தானமாக 'ரத்த தான'த்தை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. ஏனெனில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளின் போதும், ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான, முதன்மையான விஷயமாக ரத்தம் இருக்கிறது. ரத்தத்தில் ஏ, பி, ஓ, என்று சில பிரிவுகளும் இருப்பதால், எல்லாராலும் எல்லாருக்கும் ரத்தத்தை அளித்து விட முடியாது.

    ஒருவருக்கு தேவைப்படும் சமயத்தில், அவருக்குரிய ரத்த வகையாளரைத் தேடிக் கொண்டுவருவது சிரமம். எனவேதான், ரத்த தானம் என்ற பெயரில், விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இப்படி ரத்ததானம் அளிப்பவர்களின் தினமாக உலகம் முழுவதும் ஜூன் 14-ந்தேதியை 'உலக ரத்த நன்கொடையாளர்கள் தினம்' என்று அனுசரித்து வருகிறோம்.

    ரத்தத்தில் ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்தில்தான், நாம் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

    ரத்தம் பெறுபவர்கள் மட்டுமல்ல, ரத்தம் அளிப்பவர்களின் உடலும் பல நன்மைகளைப் பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல் என்பதால், இந்த நாளில் அனைவரும் ரத்த தானம் செய்ய உறுதியேற்போம்.

    ×