என் மலர்tooltip icon

    உலகம்

    மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர்.. கத்தார், குவைத், UAE, ஜோர்டான், பஹ்ரைனில் தாக்குதல்!
    X

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதல் 

    மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர்.. கத்தார், குவைத், UAE, ஜோர்டான், பஹ்ரைனில் தாக்குதல்!

    • ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லம் இலக்கு வைக்கப்பட்டது.
    • உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள், இது உங்களுக்கான நேரம் என்று ஈரான் மக்களுக்கு டிரம்ப் அழைப்பு.

    அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

    இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த சூழலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

    தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. நகரில் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டுவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை இலக்காகக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அங்கு இருந்தாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஈரானில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

    உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள், இது உங்களுக்கான நேரம் என்று ஈரான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்கிடையே பதிலடி தாக்குதலாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    தாக்குதல் ஈரான் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலைநகர் அபுதாபி, குவைத் மற்றும் கத்தாரின் தோஹாவிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.

    பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

    குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்திலும், கத்தாரிலும் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

    ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்கு ஆசியாவிற்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

    ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

    இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×