என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • சுவிஸ் நாட்டின் சீஸ் மற்றும் பால் பொருட்கள் உலக புகழ் பெற்றது
    • மணியோசை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றனர் பால் பண்ணையாளர்கள்

    மத்திய ஐரோப்பாவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நாடு, சுவிட்சர்லாந்து.

    உலகளவில் புகழ் பெற்ற சுவிஸ் சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நாட்டில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வழிமுறைகளை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

    பசுக்களை வயல்வெளிகளிலும், மலைகளிலும் மேய்வதற்கு அனுப்பி விட்டு அவற்றின் நடமாட்டத்தை சரியாக மேற்பார்வை செய்ய பசுக்களின் கழுத்தில் மணிகள் தொங்க விடுவது அவர்களின் பரம்பரை வழக்கம். பசுக்களின் நடமாட்டத்தின் போது மிக மென்மையான ஓசையை எழுப்பும் இந்த மணிகள், இந்நாட்டின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

    பனிமலை, பசுக்கள், வயல்வெளிகள், கிராமங்கள் என அனைத்து சுவிஸ் நாட்டின் அடையாளங்களும் கொண்டு சுமார் 4700 பேரை கொண்ட அந்நாட்டின் ஆர்வெஞ்சன் (Aarwangen) கிராமத்தில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல் வெளிநாட்டினர். அந்த கிராமத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், பல பசுமாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளிலிருந்து ஒன்றாக எழும்பும் ஓசை ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இரவு உறக்கத்தை கெடுப்பதாக கிராம சபையில் புகாரளித்தனர். இரவு வேளைகளில் மட்டும் மணிகளை கழட்டி வைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், "சுவிஸ் நாட்டின் தனித்தன்மை இந்த மென்மையான மணியோசை" என கூறி, கையெழுத்து இயக்கம் நடத்தி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் கையொப்பமிட்ட எதிர்ப்பு கிராம சபையில் அளிக்கப்பட்டது.

    பலமான எதிர்ப்பை கண்ட புகார் அளித்தவர்களில் ஒருவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்; மற்றொருவர் வேறு இடத்திற்கு இடம் மாறி விட்டார்.

    உலகெங்கும் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை பதுக்க சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகள்தான் முதல் புகலிடம் என நம்பப்படுகிறது. அந்த நாட்டில் ஒற்றுமையால் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைந்த சுவிஸ் பால் பண்ணையாளர்களின் மனஉறுதி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

    • முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
    • தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சூரிச்:

    ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

    • புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
    • தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

    ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.

    சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

    நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.

    தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.

    • டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.
    • இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.

    இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறை தவறுதல் ஏற்பட்ட நிலையில் 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். 5வது முயற்சியிலும் தவறு ஏற்பட்டதால் நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார்.

    பின்னர், இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    போட்டி முடியும் வரை நீரஜ் சோப்ரா தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
    • தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    சுவிட்சர்லாந்து:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    • சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்
    • உடல் பாகங்கள் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன

    தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்.

    இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 12 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த உடல் பாகங்கள் அருகிலுள்ள நகரமான சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன.

    1986 ஆம் ஆண்டு மலையில் காணாமல் போன 38 வயது மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்பதை டிஎன்ஏ பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது.

    மலை ஏறியவரின் அடையாளம் மற்றும் அவர் இறந்த சூழ்நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை. இருப்பினும், பனிப்பாறைகளின் அடியிலிருந்து கிடைத்ததாக, காணாமல் போன நபருக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நீண்ட காலணி (ஹைகிங் பூட்) மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் (க்ராம்பன்) ஆகியவற்றின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர்.

    "செப்டம்பர் 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மனி நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், மலையேற்றத்திலிருந்து திரும்பாததால் புகார் பதிவு செய்யப்பட்டு, அவர் 'காணாமல் போனவராக' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது கிடைத்திருக்கும் உடல், அவரது உடல்தான் என பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது. பனிப்பாறைகள் உருகி குறையும் போது, அவை பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் பல மலையேறுபவர்களை குறித்த விவரங்களை அதிகளவில் கொண்டு வருகின்றன " என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    ஒவ்வொரு கோடை காலத்திலும், ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகும்போது, பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மனிதர்கள் மற்றும் வேறு பொருட்கள் வெளிப்படுகின்றன. 

    • கேபிள் காரில் நேற்று காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
    • மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 300 பேர் மீட்கப்பட்டனர்.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் நேற்று உச்சிக்கு சென்ற கேபிள் கார் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

    தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லெஸ் டயபிள்ரெட்ஸ் மலைப் பகுதியில் உள்ள பிரபலமான பனிப்பாறையில் கிளேசியர் 3000 ஸ்கை ரிசார்ட் வரையிலான கேபிள் காரில் நேற்று காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

    இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கேபிள் காரில் ஒரு சிறப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற முடியும் என்றும் கேபிள் கார் நிலையத் தலைவர் தெரிவித்தார்.

    ஆரம்பத்தில், 2,971 மீட்டர் (9,747 அடி) உயரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்கலைச் சரிசெய்யும் நேரத்தில் கண்கவர் காட்சிகளைக் காத்திருந்து மகிழும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    மேலும், மக்கள் காத்திருக்கும் போது மலை உச்சி உணவகத்தில் பானங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    இந்த மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 300 பேர் மீட்கப்பட்டனர்.

    • ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.
    • டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா.

    லாசானே:

    டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடந்தது.

    இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் மூன்றாமிடமும் பிடித்தார்.

    இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    • வெப்பமயமாதல் காரணமாக ஆல்ப்ஸ் பனிப்பறை உருகி வருகிறது
    • பணக்கார ஆல்பைன் நாடான சுவிட்சர்லாந்து, அதன் எரிசக்தி தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது

    தனது நாட்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதன் காரணம் புவி வெப்பமடைவதலின் தாக்கம் என உணர்ந்த சுவிட்சர்லாந்து, தன் நாட்டை கார்பன் நடுநிலைமைக்கு விரைவாக வழிநடத்தும் நோக்கில் பருவநிலை மசோதாவுக்கான வாக்கெடுப்பை வரும் ஞாயிறு அன்று நடத்துகிறது.

    இந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு, சுவிட்சர்லாந்து நாடு இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், பசுமை சார்ந்த வளர்ச்சி வழிகளை மேம்படுத்தவும், வீட்டிலேயே உண்டாக்கக்கூடிய மாற்று எரிபொருள்களை ஊக்குவிப்பதற்கும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தை சார்ந்து கொண்டு வரப்படவுள்ளது.

    சுவிட்சர்லாந்தை 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரலாக மாற்றும் மசோதா, வலுவான பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், கருத்து கணிப்பு நிறுவனமான ஜிஎஃப்எஸ்.பெர்ன் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஆதரவு தற்பொழுது 63% ஆக குறைந்துள்ளதை காட்டுகிறது.

    சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய கட்சியும், வலதுசாரி கட்சியுமான சுவிஸ் மக்கள் கட்சி, இந்த மசோதாவை நிராகரிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், அக்கட்சி இந்த மசோதா பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து வருகிறது.

    காலநிலை மாற்றங்களின் காரணமாக 2001 மற்றும் 2022 வருடங்களுக்கிடையில் பனி அளவுகளில், மூன்றில் ஒரு பகுதியை சுவிஸ் ஆல்ப்ஸ் மலை இழந்தது. இதனால் எரிசக்தி உற்பத்தியை குறைப்பது மற்றும் மோசமான பருவகால மாற்றத்தை எதிர்கொள்வது அவசியம் என்பதை மசோதாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    பணக்கார ஆல்பைன் நாடான சுவிட்சர்லாந்து, அதன் எரிசக்தி தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது. பயன்படுத்தும் அனைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது.

    தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள பருவநிலை பாதுகாப்பு சட்டம், எரிசக்தி ஆற்றலில் புதுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் பற்றியதாகும். இது சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் வழி செய்கிறது.

    சுவிட்சர்லாந்தில் 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நுகர்வுகளையும் மொத்தமாக தடைசெய்வதற்கான மக்கள் வாக்கெடுப்பிற்காக, பனிப்பாறை முன்முயற்சி என அழைக்கப்படும் காலநிலை ஆர்வலர்களின் முயற்சிக்கு மாற்றாக இந்த சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது.

    அரசாங்கம் தடை யோசனையை புறக்கணித்தது என்றாலும் அந்த முன்முயற்சியின் பிற கூறுகளை உள்ளடக்கிய ஒரு எதிர் திட்டத்தை உருவாக்கியது.

    எரிவாயு மூலமாகவும் எண்ணெய் மூலமாகவும் இயங்கும் வெப்பமாக்கல் அமைப்புகளை, காலநிலைக்கு உகந்த மாற்றுகளுடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மற்றும் வணிகங்களை பசுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி நகரச் செய்யவும், ஒரு பத்தாண்டு கால அளவில் 2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதியுதவி வழங்குவதாக இதன் உரை உறுதியளிக்கிறது.

    சுவிஸ் மக்கள் கட்சியை தவிர சுவிட்சர்லாந்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன. அக்கட்சி மட்டும் இது "மின்சாரத்தை வீணடிக்கும் சட்டம்" என நிராகரித்து, அந்நாட்டின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ் இதற்கெதிரான வாக்கெடுப்பைத் தூண்டியது. இக்கட்சியின் நிலைப்பாட்டின்படி, காலநிலை நடுநிலையை கால் நூற்றாண்டுக்குள் அடைவதற்கான இந்த மசோதாவின் இலக்கு, புதைபடிவ எரிபொருள் தடையை குறிக்கும் என்றும் இது எரிசக்தி அணுகலை அச்சுறுத்தும் என்றும் மேலும், இதனால் வீட்டு மின் கட்டணங்களும் உயரும் என்றும் எச்சரிக்கிறது. கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக இக்கட்சி 2021ல் வெற்றிகரமாகப் போராடியது.

    ஆனால் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசு வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை குறைத்தாக வேண்டிய ஒரு உந்துதலில் செயல்பட்டு கொண்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில், பெரிய வணிகங்களுக்கான வரி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுகளுக்கான அமைப்பின் (OECD) தலைமையில் சுவிட்சர்லாந்து இணைய வேண்டுமானால், பன்னாட்டு நிறுவனங்களுக்கான உலகளாவிய குறைந்தபட்ச வரி விகிதம் 15% என இருக்க வேண்டும்.

    750 மில்லியன் யூரோக்களுக்கு ($808 மில்லியன்) மேல் வருவாய் கொண்ட, சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய வரி விகிதத்தை விதிக்கும் திட்டத்தை 73 சதவீத வாக்காளர்கள் ஆதரிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது வரை, சுவிட்சர்லாந்தின் 26 மண்டலங்களில் பல, உலகிலேயே மிகக் குறைந்த கார்ப்பரேட் வரி விகிதங்களில் சிலவற்றை விதித்துள்ளன.

    இதற்கான காரணங்களாக, அதிக தொழிலாளர் ஊதியம் மற்றும் அதிகரிக்கும் இருப்பிடச் செலவுகளை அந்நாடு கூறி வருகிறது. இந்த புதிய துணை வரிவிதிப்பின் மூலம், முதல் ஆண்டில் மட்டுமே வருவாய் 1 பில்லியன் முதல் 2.5 பில்லியன் பிராங்குகள் வரை இருக்கும் என்று சுவிஸ் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

    சர்வதேச நிறுவனங்களை தொடர்ந்து ஈர்ப்பதற்கு மேலும் முயற்சிகள் தேவைப்படும் என பெர்ன் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தை ஒரு கவர்ச்சிகரமான வணிக பிரதேசமாக மாற்ற கூடுதல் வரி வருமானத்தில் ஒரு பகுதியை பயன்படுத்துவதற்கும் அது முன்மொழிந்துள்ளது.

    • ஜெனீவா ஓபன் டென்னிசில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் ஜாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெனீவா:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.

    இதில் அதிரடியாக ஆடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

    நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
    • ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட்டது.

    ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ்(டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

    டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இந்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) ஏலம் போனது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×