என் மலர்
மெக்சிகோ
- மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது.
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் அபாசியோ எல் ஆல்டோ நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் மதுபான விடுதியில் 4 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.
கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்சிகோவில் பாரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
- இந்தத் தாக்குதலில் பலியானோரில் 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் ஈராபுவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பிச் சென்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் தென்மேற்கு மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நகர மேயர் உள்பட 18 பேர் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
- மாணவர்கள் பலர் திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்தனர்.
- இதுபற்றி தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
மெக்சிகோ சிட்டி :
வடஅமெரிக்க நாடான மெக்சிகோ உலகளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும், அதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.
அப்போது மாணவர்கள் பலர் திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதை அறிந்து பதறிப்போன மாணவர்களின் பெற்றோர் அலறிதுடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். பின்னர் பள்ளி ஊழியர்களும், பெற்றோரும் இணைந்து திடீர் உடல் நலக்குறைவுக்கு ஆளான 57 மாணவர்களை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியாக தகவலை தெரிவித்தனர்.
இதைகேட்டு மாணவர்களின் பெற்றோர் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மருத்துவ பரிசோதனையில் மாணவர்களின் உடலில் கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் கலந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள வேறு 2 பள்ளிகளில் இதேபோல் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களுக்கும் போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்த 3 சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் அல்லது உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எனினும் விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என தெரிவித்துள்ள சியாபாஸ் மாகாண போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.
- மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் அந்நகர மேயர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தொலைதூர நகரமானது மெக்சிகோவின் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றான டேரா கலிண்ட்டியில் உள்ளது.
மெக்சிகோவின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலாபன் என்ற நகரில் சிட்டி ஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.
அவர்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த கட்டிடத்தின் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கட்டிடத்தில் இருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்
மர்ம கும்பல் நடத்திய இந்த வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் மெக்சிகோ மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜுவான் மென்டோசா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில அரசு ஊழியர்களும் உயிர் இழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்தவர்கள் சிட்டி ஹால் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனால் அந்த பகுதி ரத்த காடாக காட்சி அளித்தது. அந்த கட்டிடத்தின் பல இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தது.
இந்த சம்பவத்திற்கு லாஸ் டெக்வலிரோஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஆனால் இதனை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மர்ம கும்பல் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. இது வைரலாக பரவி வருகிறது
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்சிகோவில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு கும்பலை பிடிக்க அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் என அக்கட்சி தெரிவித்து உள்ளது.
சமீபகாலமாக மெக்சிகோவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மத்திய மெக்சிகோ மாநிலமான குவானா ஜூவாடோவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வடக்கு மெக்சிகோவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ம் ஆண்டு அரசு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து இது போன்ற சம்பவங்கள் தொடர் கதை போல நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய மெக்சிகோ குவானாஜூவலாடோ என்ற மாகாணத்தில் தரிமோரோ என்ற பகுதி உள்ளது.
- மர்ம நபர்களின் இந்த தாக்குதலுக்கு குவானா ஜூவலாடோ கவர்னர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தரிமோரா:
மத்திய மெக்சிகோ குவானாஜூவலாடோ என்ற மாகாணத்தில் தரிமோரோ என்ற பகுதி உள்ளது. சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலர் குண்டுகாயம் அடைந்து கீழே சரிந்தனர். இதைபார்த்த பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்ககை 10 ஆக உயர்ந்தது.
இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
குவானாஜூவலாடோ மாகாணத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மெக்சிகோ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அனாலும் போதை பொருட்கள் மற்றும் சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபர்களின் இந்த தாக்குதலுக்கு குவானா ஜூவலாடோ கவர்னர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
- மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- இந்த விபத்தில் சிக்கிய மேலும் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
- பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வடக்கு மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி வெடித்து தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவி பேருந்தும் தீ பற்றி ஏரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு எல்லை மாநிலமான தமௌலிபாஸில் மான்டேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் நடந்த இந்த விபத்தில் சிக்கிய மேலும் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எரிபொருள் லாரியின் ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பேருந்து மத்திய மாநிலமான ஹிடால்கோவில் இருந்து புறப்பட்டு மான்டேரிக்கு சென்று கொண்டிருந்தது.
- சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு மெக்சிகோ சென்றுள்ளது.
- மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.
மெக்சிகோ சிட்டி:
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றுள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர். மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனித நேயத்திற்கான கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என்று ஓம் பிர்லா கூறினார்.
இதுதொடர்பாக, ஓம் பிர்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்துவைப்பதில் பெருமை அடைகிறேன். லத்தீன் அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும். இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். சுவாமிஜியின் செய்தி மற்றும் மனிதகுலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது. அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் உள்ளது. இன்று மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மெக்சிகோ பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்திய-மெக்சிகோ நட்புறவு பூங்காவை மக்களவை சபாநாயகர் திறந்து வைத்தார்.
மேலும், இந்தியாவும் மெக்சிகோவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதையும், 1947-ல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என்பதையும் ஓம் பிர்லா தெரிவித்தார்.
- தெருக்களில் நடந்த வன்முறையில் வானொலி நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தியது.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள சியூதத் ஜூவாரஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்த தகவல் வெளியில் பரவியதையடுத்து, நகர வீதிகளில் இரு குழுவினரிடையே கலவரம் மூண்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பொதுமக்களும் தாக்கப்பட்டனர். வணிக நிறுவனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இந்த வன்முறையில், வானொலி நிலையத்தின் 4 ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறையியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போதைப்பொருள் விற்பனையாளர்கள், தொழிலை பாதுகாக்கவும், தங்களுக்கு போட்டியாக உள்ளவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்கவும், உள்ளூரில் செயல்படும் குழுக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படுகின்றன.
- சுமார் 800 கிலோ எடையுள்ள நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் பணியாற்றினர்.
- சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவில் உலகின் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. வெனுஸ்டியானோ கரான்சா நகரில் 17வது ஆண்டு டோர்டா கண்காட்சியின்போது டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை, 242.7 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடையுள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் இணைந்து பணியாற்றினர்.
இந்த கண்காட்சியானது, டோர்டா சமையல் கலைஞர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோசா வென்ச்சுரா போன்ற சமையல்காரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தங்களின் கடல் உணவு டோர்டா உணவகத்தை மூட வேண்டியிருந்தது. இந்த கண்காட்சி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என கூறுகின்றனர்.
- கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது.
- திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா.
இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார். ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது.
கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.
திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறும்போது, "இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளம் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை" என்றார்.
இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
- பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார்.
இந்த தொங்கு பாலம், மர பலகைகள் மற்றும் உலோக சங்கிலிகளால் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. மேயரால் பாலம் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்த சம்பவம் மேயர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






