என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்ய முடியும்
    • உள்ளூர் மீனவர் அமைப்புகளும், சீனாவும், தைவானும் எதிர்க்கிறது

    ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது.

    இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

    ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும்.

    ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன்.
    • உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது.

    ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒருவர் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற அந்த என்ஜினீயருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது அதிக பற்று உண்டாம்.

    எனவே தானும் ஓநாயை போல மாற வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார். ஓநாய் உடையில் அவர் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உவேடா கூறுகையில், நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன். வேலை மற்றும் பிற விசயங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மறக்க இது உதவுகிறது. இந்த உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது. கண்ணாடியில் இந்த உடையை பார்க்கும் போது நான் ஒரு ஓநாயை பார்ப்பது போலவே உள்ளது என்றார்.

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது.
    • இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

    இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனோய் வென்றனர்.

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரரை வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ-டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார்.

    • அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு.
    • ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரிக்கவேண்டி உள்ளது.

    ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது.

    அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

    இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறும்போது, 'சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான திட்டங்களில் திருப்தி அடைந்தேன்' என்றார். இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை ஜப்பான் பெற்றுள்ளது. அதேவேளையில் இத்திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் திறந்து விட வேண்டி உள்ளது. இந்த செயல்முறையை முடிக்க 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2030-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் பேட்டரி தொடர்பான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
    • 40 மாணவர்களைக் கொண்ட முதல் குழு, வரும் டிசம்பரில் தொழில்நுட்பத்தை கற்க தொடங்கும்

    உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாங்குவதால் தங்களுடைய நாட்டில் சொந்தமாக அதை தயாரிக்கும் திறன் குறைந்து விட்டதாக எண்ணுகின்றன. தற்போது மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் ஒரு சந்தை உருவாகி அதற்கான தேவை பெருகி வருகிறது.

    இவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமானவையாக கருதப்படுவது பேட்டரி தொடர்பான பாகங்கள். இதை தாங்களாகவே தயாரிக்க இந்த நாடுகள் நினைக்கும்போது, அதற்கான தொழில்முறை வல்லுனர்கள், என்ஜினீயர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல.

    இந்நிலையை சமாளிக்க அந்நாடு ஒரு திட்டம் தீட்டியுள்ளது.

    2030-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் பேட்டரி தொடர்பான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த துறையின் தொழிலாளர் சக்தி தற்போதைய 10 ஆயிரத்தில் இருந்து நான்கு மடங்காக உயரும் என எதிர்பார்க்கிறது.

    பல்லாயிரக்கணக்கான பேட்டரி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கண்டுபிடித்து பயிற்சியளிக்க, ஜப்பான், அந்நாட்டின் உயர்நிலை பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், மற்றும் தொழிற்கல்வி மாணவர்களையும், நாடு முழுவதும் கண்டறிந்து பல ஆண்டு தீவிரப் பயிற்சியளிக்க திட்டமிட்டிருக்கிறது.

    இதற்காக மிகப்பெரிய அளவில் ஆட்சேர்ப்பு செய்யவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இத்தகவல்களின்படி, 40 மாணவர்களைக் கொண்ட முதல் குழு, வரும் டிசம்பரில் ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்கல்வி பள்ளியில், பேட்டரி தொழில்நுட்பத்தை கற்கத் தொடங்கும். பின்னர், இத்திட்டம் உயர்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

    இன்று நாம் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது ஜப்பான். இது மட்டுமல்லாமல் பல அற்புதமான கண்டுபிடிப்புகளின் தளமாகவும் ஜப்பான் இருந்ததை உலகம் அறியும். உலகளாவிய லித்தியம் சந்தை பங்கில் 50 சதவிகிதத்திற்கு மேல் ஜப்பான் தன்னிடம் வைத்திருந்தது. ஆனால், இப்போது அந்நாடு திறமையாளர்களுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.

    ஜப்பானில் மட்டுமல்லாது, இந்த நிலை பல வளர்ந்த பொருளாதாரங்களிலும் நிலவுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, மற்றும் அமெரிக்காவிலும் மின்னணு வாகன தயாரிப்பாளர்களிடையே திறமையானவர்களை கண்டறிந்து பணியிலமர்த்த கடுமையான போட்டி நிலவுகிறது.

    எடுத்துக்காட்டாக, பேட்டரி பொறியாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு தலைமை நிதி அதிகாரி (CFO) பெறும் சம்பளத்தை வழங்குவதாக அமெரிக்க பேட்டரி கார் நிறுவனமான டெஸ்லா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • கசிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பீர் நிறுவனத்தின் தலைவர் ஹஜிமே முரானோ தெரிவித்தார்.

    ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள்.

    அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில் இந்த கசிவு தொடங்கியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறது.

    "எங்கள் தொழிற்சாலை வசதிகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில், உணவு சுகாதாரச் சட்டத்தின் அமலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் இருக்கிறது. குளிர்விக்கும் நீரில் உள்ள அது கசிந்ததும், அந்த நீர், மழைநீர் வடிகாலின் வழியாக ஆற்றில் கலந்து ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறி விட்டது" என்று ஓரியன் ப்ரூவரிஸ் கூறியது.

    கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிமே முரானோ தெரிவித்தார். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

    அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.

    ஜப்பானிய ரிசார்ட் நகரமான நாகோ, மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் அன்னாசிப்பழ பண்ணைகளுக்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டதிருத்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • பாலியல் நோக்கங்களுக்காக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    டோக்கியோ:

    ஜப்பானில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பான சட்டதிருத்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கங்களுக்காக மிரட்டுதல், உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த சீர் திருத்தத்துக்கு மனித உரிமை மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மனித உரிமை குழு ஒன்று கூறும்போது, பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை உயர்த்துவது குழந்தைகளுக்கு எதிரான பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற செய்தியை சமூகத்திற்கு அனுப்பும். இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று தெரிவித்தது.

    ஜப்பானில் 1907-ம் ஆண்டில் இருந்து 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டனர். இதனால் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது வயது வரம்பை 16 ஆக ஜப்பான் அரசு உயர்த்தி உள்ளது.

    பாலியல் உறவுக்காக சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இங்கிலாந்தில் 16 ஆகவும், பிரான்சில் 15 ஆகவும், ஜெர்மனி, சீனாவில் 14 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.

    மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படுகிறது.
    • சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

    உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

    அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது.

    சம்பவ நாளில் உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட சோயா சாஸ் பாட்டில், தேநீர் கோப்பை, கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த சுஷியை நக்கினார். மேலும் இவை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் மந்தமானதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்வேயர் பெல்ட் மூலம் உணவு வழங்கி வரும் மற்ற உணவகங்கள், இது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தது. அதன்படி குரா சுஷி எனும் உணவகம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க செய்வதாக அறிவித்தது.

    மற்றொரு உணவகம் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படும் உணவு வகைகளை மூடி வைக்க திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. ஹமசுஷி உணவகத்தில் கன்வேயர் பெல்ட் முறையே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டது. 

    ×