search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமருக்கு நாங்கள் எதிரி: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
    X

    ராமருக்கு நாங்கள் எதிரி: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

    • இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை.
    • ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா கோவையில் நடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-


    இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை. ஒரு நாடு என்றால், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே பாரம்பரியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது நாடாக இருக்க முடியும். அதனால் இந்தியா ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம். தமிழ் ஒரு நாடு, மலையாளம் ஒரு நாடு, ஒடியா ஒரு நாடு. இந்த நாடுகள் அடங்கியதுதான் இந்தியா என்ற துணைக் கண்டம்.

    நீங்கள் ஒன்றைக் காட்டி, இது கடவுள், இது ராமர் என்பீர்கள். பாரத் மாதா கி ஜே என்பீர்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் ராமரை ஏற்க மாட்டோம். பாரத மாதாவையும் ஏற்க மாட்டோம். ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஆ.ராசாவின் பேச்சை ஏற்றுக் கொள்கிறீர்களா? ராகுல் காந்தி இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-


    ஆ.ராசாவின் பேச்சை 100 சதவீதம் நாங்கள் ஏற்க மாட்டோம். அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்.

    ராமரின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டான ஒன்றாகும். ராமர் என்றால் பெருமை, ராமர் என்றால் அன்பு, ராமர் என்றால் நேர்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    எனவே ஆ.ராசாவின் பேச்சை நாங்கள் முழுமையாக கண்டிக்கிறோம். அவரது பேச்சுக்கு எந்த ஆதரவும் இல்லை.

    இவ்வாறு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா கூறினார்.

    Next Story
    ×