என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,872 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14,35,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்  213723 பேருக்கும், டெல்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,872ஆக உயர்ந்துள்ளது. 
    புதுவையில் மேலும் 7 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் குறுக்குத்தெரு, 2.தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், 3.தர்மாபுரி கலைவாணர் வீதி, 4.தட்டாஞ்சாவடி இஸ்ரவேல் நகர், நேசர் வீதி, 5.பூமியான்பேட்டை ஜவகர் நகர் கே பிளாக், 6.காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் வடக்கு வீதி, 7. காலாப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் டி பிளாக் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக வந்த செய்தி உறுதிப்படுத்தப்படாதது என்று கிரண் பெடி விளக்கம் அளித்துள்ளார்.
    புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார். கவர்னராக கிரண் பெடி உள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண் பெடிக்கு அதிகாரம் அதிகம். இதை பயன்படுத்தி நாராயண சாமியுடன் மோதல் போக்கை கொண்டுள்ளார். இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    உச்சக்கட்டமாக சட்டசபை ஆளுநர் இல்லாமல் கூட்டப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரி மாநில ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி உலா வருகிறது. இதை கிரண் பெடி மறுத்துள்ளார்.

    இதுகுறித்து கிரண் பெடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என் அருமை நண்பர்களுக்கு, இதுகுறித்து தகவல்கள் எனக்கு அதிகப்படியாக வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டாம் அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்தியை பரப்ப வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    அரியாங்குப்பத்தில் மாற்றுத்திறனாளி வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 31). மாற்றுத்திறனாளி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மாடி வீட்டின் கீழ் தளத்தில் அய்யனார் வசித்து வருகிறார். மேல்தளத்தில் வீட்டின் உரிமையாளர் வசிக்கிறார்.

    கடந்த 23-ந் தேதி அய்யனார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவரது மனைவி தனலட்சுமி, அய்யனாருக்கு போன் செய்து, வீட்டில் ஒருஅறையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை காணவில்லை என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு வந்து பல இடங்களில் தேடிப்பார்த்தபோதும், நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் அய்யனார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துணிகரமாக நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி சட்டசபை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சட்டசபை வளாகத்தை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரான பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கட்சி என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அவரது கட்சியினரை மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை கலக்கமடைய வைத்துள்ளது. இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ. மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

    நேற்று சட்டசபை நடைபெறும் மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து திறந்த வெளியில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி சட்டசபை வளாகம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 13,85,522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 705 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 8,85,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,67,882 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 366368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 207194 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13389 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 206737 பேருக்கும், டெல்லியில் 129531 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,787 ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,645 பேர் குணமடைந்துள்ளனர். 1,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேர் பலியாகி உள்ளனர்.

    கவர்னர் கிரண்பேடி மீது பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினைகளை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    சிவா (தி.மு.க.): தாசில்தார் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரி தவறு செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் வந்துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளர்கள்.

    அமைச்சர் கமலக்கண்ணன்: யாரோ ஒருவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அதிகாரமில்லாத காவல்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு தாசில்தாரை அவமானப்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலால் துறை தொடர்பான வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அன்பழகன் (அ.தி.மு.க.): கலால்துறை சட்டப்படி ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் தனது வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் காவல்துறையினர் தாசில்தார் வீட்டிற்கு சென்று 2, 3 மதுபாட்டில்களை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அமைச்சர் கமலக்கண்ணன்: மாநில வருவாயில் 4-ல் ஒரு பங்கு கலால்துறை மூலம் வருகிறது. மதுபான விற்பனையில் விதி மீறல் என்றால் அபராதம் விதிக்க தான் இடம் உள்ளது. ஆனால் ஒரு சில மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர். சிலவற்றை இடைநீக்கம் செய்துள்ளனர். முன்பு மாதந்தோறும் கலால் துறை மூலம் சுமார் ரூ.90 கோடி அளவுக்கு வருமானம் வந்தது. அதன்படி கடந்த 4 மாதத்தில் ரூ.350 கோடி வருமானத்தை எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது கிடைத்தது வெறும் ரூ.40 கோடி தான். கலால் துறை துணை ஆணையரின் அதிகாரத்தில் முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ தலையிட முடியாது. இப்படி இருக்க தற்போது உள்ள நிலை அனுமதித்தால் புதுச்சேரி இன்னொரு சாத்தான்குளம் ஆகிவிடும்.

    அன்பழகன்: மதுபான விற்பனைக்கு தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கார்ப்பரேஷன் அமையுங்கள் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். நீங்கள் தான் ஒருசில மதுபான வியாபாரிகளை சம்பாதிக்க விடுகிறீர்கள்.

    பாஸ்கர் (அ.தி.மு.க.): மதுபான வியாபாரிகளுக்காக இவ்வளவு பேசுகிறீர்கள். இந்த குறைவான காலத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஒரு சிலரது மிரட்டலால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை ஏன் யாரும் பேசுவதில்லை. கலால் துறைக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம். இதன் பின்னால் என்ன நடந்தது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: சுகாதாரத்துறை அதிகாரி விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் வருத்தம் தெரிவித்து இந்த விஷயத்தில் கவர்னரின் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளேன்.

    இதேபோல் மதுபான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தங்களது வீடு மற்றும் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தில் 12 ஆயிரம் மீனவர்கள் 400 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை(மஞ்சள் மற்றும் சிவப்புநிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு) உடனே வழங்கவேண்டும். டீசல் மானியத்தை புதுச்சேரி அரசு உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று 11 மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் தங்களது வீடு மற்றும் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:-

    3 மாதத்திற்கு பிறகு அண்மையில் தான் மீன்பிடித்து வந்தோம். இந்த நேரத்தில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மீன்பிடி தடைக்கால நிவாரணம் அனைத்து நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, சிவப்புநிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, மஞ்சள்நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமான சான்றிதழை கேட்டு வருகின்றனர். இது ஒற்றுமையாக உள்ள மீனவர்களை பிரிக்கும் செயலாக பார்க்கிறோம். எனவே அனைவருக்கும் மீன்பிடிதடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தவேண்டும். மீனவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்றனர்.
    புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பேரவை கூட்டம் மரத்தடியில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.  இதனையடுத்து  புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்  மரத்தடியில் சுமார் 2.15 மணி நேரம் நடைபெற்றது.

    புதுச்சேரி நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சபாநாயகர் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி  சபாநாயகர், அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.க்கள் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 


    புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

    அமைச்சர் கந்தசாமி: கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நபர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு தவறாக பேசுகிறார். அதனை உடனே சமூக வலைதளத்தில் (வாட்ஸ்-அப்) பரப்புகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து தவறான தகவலை பரப்புகிறார்கள், மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்.

    பாஸ்கர்(அ.தி.மு.க.): ஒருசிலர் சுய விளம்பரத்துக்காக எம்.எல்.ஏ.க்களை ஒருமையில் விமர்சிப்பதும், தவறான தகவலை பரப்புவதுமாக உள்ளனர். அதுகுறித்து ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த நபர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி குறுக்கு வழியில் புதுவை உள்ளே வந்துள்ளனர். அவர்களை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் எவ்வாறு புதுச்சேரிக்குள் வந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். கந்த சஷ்டி கவசத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. எம்மதமும் எங்களுக்கு சம்மதம்.

    எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் நம்முடைய பண்பாடு. பாரம்பரியம். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    அன்பழகன்: எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளை தவறான தகவல் பரப்புவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனந்தராமன் (அரசு கொறடா): முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தனிநபர் அல்ல. மதிப்புமிக்க பதவியில் உள்ளவர்கள். எனவே தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உண்மைத்தன்மை இல்லாத பொய் சம்பவங்கள் அதிகளவு பரவி வருகிறது. உறுப்பினர்கள் நல்ல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விரைவாக செயல்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படும்.

    இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எழுந்த அனந்தராமன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் அரசையும், எம்.எல்.ஏ.க்களையும், கவர்னரையும் அவமரியாதை செய்யும் வகையில் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன் என்றார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசுகையில், சட்டசபையில் இல்லாத எம்.எல்.ஏ. பற்றி பேசக்கூடாது. அவர் தவறு செய்திருந்தால் பின்னர் புகார் அளிக்கலாம் என்றார். இதனால் அவையில் சிறிது கூச்சல்-குழப்பம் நிலவியது.
    புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் திறந்த வெளியில் நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பேரவை கூட்டம் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் திறந்த வெளியில் மதியம் 12.30க்கு நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
    சட்டசபை கூட்டத்தொடர் தள்ளிப்போய் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நேற்று காலை கவர்னர் கிரண்பேடி உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து எம்.எல்.ஏ.க்கள் மாலையில் பேசினார்கள். இந்த கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கவர்னர் உரையில் புதுவை அரசின் சாதனைகள் பட்டியல் இடம் பெற்றுள்ளது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 75 சதவீதம் தான் நிதியை செலவிட விட்டார்கள். நாங்கள் நிதி பற்றாக்குறை இருந்தாலும் 93 சதவீத நிதியை செலவிட்டு உள்ளோம். மத்தியில் மாற்றுக்கட்சி அரசாங்கம் இருந்தாலும் பல துறைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளோம்.

    எம்.எல்.ஏ.க்கள் சில குற்றச்சாட்டுகளைக் கூறி உள்ளனர். புதிய தொழிற்கொள்கை வந்த பிறகு தொழில் தொடங்க வருபவர்களுக்கு பிப்டிக் நிலத்தை கொடுக்க சிலர் முட்டுக்கட்டை போட்டனர். சுற்றுலா திட்டங்களை தடுத்து நிறுத்தினார்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட ரூ.8 கோடியை தர விடாமல் தடுத்து விட்டார்கள்.

    ரோடியர் மில்லுக்கு ரூ.24 கோடியும், சுதேசி பாரதி மில்லுக்கு ரூ.6 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அதையும் தடுத்து நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் 100 சதவீத வளர்ச்சியை புதுவை மாநிலம் எட்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே பட்ஜெட்டை தயாரித்தோம். அதிலும் மக்கள் நலத் திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சி நடந்தது. அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் போடவும் அவர்கள் மூலம் அரிசி வழங்கவும் பல கூட்டம் நடத்தினோம். ஆனால் அதையும் தடுத்து நிறுத்தினார்கள். நாம் நல்லது செய்தால் எப்போதும் நல்லதுதான் நடக்கும். நியாயம் எப்போதும் வெல்லும். நம்மை தடுத்தவர்கள் மருத்துவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டார்கள். இதனால் மன்னிப்பு கேட்கும் நிலை கூட ஏற்பட்டது.

    சட்டசபை கூடுவதற்கு முந்தைய நாள் கூட சட்டசபையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்கள். சட்டசபைக்கு உரையாற்ற வருவதாக ஒப்புதல் கொடுத்து விட்டு வர முடியாது என்று கூறினார்கள். நியாயம் நம் பக்கம் இருந்ததால் சட்டசபையைக் கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். அப்போது சட்டசபை கூடாமல் தள்ளிப்போய் இருந்தால் நான் எனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன். இந்த சட்ட சபைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. அந்த மாண்பு காக்கப்படவேண்டும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் அவசரப்படாமல் உண்மையைப் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×