என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கடற்கரையில் அரியவகை ஆமைகள் இறந்து ஒதுங்கி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள சின்ன வீராம்பட்டினம், பாரடைஸ் பீச், புதுகுப்பம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாக பெரிய ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. 

    வீராம்பட்டினம் பகுதியில் ஒரு ஆமை இறந்து ஒதுங்கிய நிலையில் பாரடைஸ் பீச்சில் 2 ஆமைகள் இறந்து ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    ஆமைகளை பார்வையிட்ட  வனத்துறை  ஊழியர்கள் இறந்து ஒதுங்கிய ஆமைகள் ஆலிவ் ரெட்லி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவை இனப் பெருக்கத்திற்காக பல கடல் மைல்கள் கடந்து புதுவைக்கு வந்து செல்லும். 

    அப்படி வந்த ஆமைகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் படகில் அடிபட்டு இறந்து கரை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். 

    ஆமைகள் ஒதுங்கிய பகுதி சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அச்சபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை ஊழி யர்கள் தெரிவித்துள்ளனர்.
    லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காய்கறி கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 23). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து அரவிந்த்குமார் கடையை மூடிவிட்டு சென்றார்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500 ரொக்க பணம் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கடையின் கூரையை 2 வாலிபர்கள் பிரித்து இறங்குவது பதிவாகி இருந்தது. உடனே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதற்காக கேமரா காட்சிகளை மற்ற போலீசாரிடம் பகிர்ந்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய காவலர் ஒருவர் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் லாஸ்பேட்டை காய்கறி கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதுபற்றி தெரிவித்து லாஸ்பேட்டை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சஞ்சய்குமார் (19), ஸ்டிக்கர் மணி (21) என்பது தெரியவந்தது.

    இவர்கள் அரவிந்தகுமாரின் காய்கறி கடையில் பணம், செல்போன் சார்ஜரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் சூழலை ஏற்படுத்தி வருகிறோம் என்று தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
    புதுச்சேரி:

    குடியரசு தினத்தையொட்டி அரசு சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நடந்தது.

    தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் அடி, உதைபட்டு பெற்றுத்தந்த விடுதலையால் நாட்டில் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

    உலக அரங்கில் நம் நாடு  தலைசிறந்த நாடாக எல்லோரும் வியந்து பாராட்டும் நாடாக மாறி உள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் நன்றாகவும், விரும்பிய பாடத்தை  படிக்கவும் புதுவை அரசு உயர்கல்வி வரை இலவச கல்வி அளித்து வருகிறது. 

    புதுவையில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி யோடு  வாழும் சூழலை அரசு உருவாக்கி உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறோம். 

    போலீசார் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள டாக்டர், செவிலியர், தொழில்நுட்ப ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு  வருகிறது. 

    அனைத்து அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல தொழிற்சாலைகளை உருவாக்கும் சூழலையும், சுற்றுலாவை மேம்படுத்தியும் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பணியை அரசு செய்து வருகிறது. கொரோனா தொற்று பெரும் சவாலாக உள்ளது.  யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    தடுப்பூசி போடுவதால் தொற்று பாதிப்பு மிக  குறைவாக ஏற்படும். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம்,  கென்னடி  எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் கந்தன்,  வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
    ஓசியில் பெட்ரோல் கேட்டு அண்ணன் தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த அரங்கனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (வயது38). கட்டிட தொழிலாளி. 

    இவர் தனது தம்பி  ஞானசேகருடன் கரிக்கலாம்பாக்கம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரங்கனூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது  அதே பகுதி சேலியமேடு கிராமத்தை சேர்ந்த வேலு மகன் பிரபு என்கிற பிரபாகரன், அவரது கூட்டாளிகள் அருண், அருள் ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது தெரிந்த நபர்கள் என கருதி  ஞானமூர்த்தி, பிரபுவிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டார். அதற்கு வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது, அதனால் நிற்கிறோம் என கூறினார்.

    மேலும் பிரபு, ஞானமூர்த்தியிடம் உன்னுடைய மோட்டார் சைக்கிளிலிலிருந்து பெட்ரோல் எடுத்து தறுமாறு கேட்டார். அதற்கு என் வண்டியில் இருந்து எடுக்க முடியாது, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுமாறு கூறினார். 

    இதில் ஆத்திரமடைந்த பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஞானமூர்த்தியை அசிங்கமாக திட்டி கையாலும், தடியாலும் கடுமையாக தாக்கினர். மேலும் எங்களிடம் வைத்துக்கொண்டால் உன்னையும் உன் தம்பியையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஞானமூர்த்தி மற்றும் ஞானசேகர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இது குறித்து பாகூர் போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பிரபாகரன், அருண்,அருள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றார்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச அளவிலான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச அளவிலான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருதான டிஎஸ்2 என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

    நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1455 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம், 2013ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக் கப்பட்டது. அப்போது சுமார் 30 புலிகள் இருந்ததாக அப்போதையை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 
     
    அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. அதேபோல் இந்த புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பிஆர்ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு,மலை மதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிறஇடங்களுக்கு புலம்பெயர்ந்து இரை தேடியும்  புதிய எல்லையை பிரவேசிக்கவும் இயலுகிறது. இதனால் புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. 

    2013ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில்  தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷ்யா, சைனா, இந்தோனேஷியா, பங்களாதேஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர் டைகர் ஸ்டேன்டேடு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள்  கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு 2010ம் ஆண்டு 10 ஆண்டுகளில்  புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. 

    2022ம் ஆண்டில் இருமடங்காக உயரத்திய நாட்டிக்கு  டிஎஸ்2 எனும் சர்வதேச விருது வழங்க கூட்டமைப்பு அறிவித்தது.இதன்படி சர்வசேத அளவில்  10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியதற்காக  டிஎஸ்2  என்ற விருதை முதல் பரிசாக இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கும், இரண்டாவது விருதாக  நேபாளம் பார்டியா தேசிய பூங்காவுக்கும் வழங்கியுள்ளது.
     
    தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி பழங்குடியின மக்களின் ஆதரவு போன்வற்றால் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தாண்டு கொரானா பிரச்சனை காரணமாக ஆன் லைன் கானொளி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்குகின்றன.

    புதுவையில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதியவர் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 25-ந் தேதி 4,815 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில், 1,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 1,060 பேரும், காரைக்காலில் 264 பேரும், ஏனாமில் 149 பேரும், மாகியில் 31 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 45 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 34 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 21 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 72 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    கடந்த மாதங்களில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் கோவிட் கேர் சென்டர்களில் யாரும் அனுமதிக்கப் பட வில்லை. 

    ஆனால் தற்போது தொற்று அதிகமாகி வருவதால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோர் எண்ணிக்கையும், கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

    தற்போது மருத்துவ மனையில் 233 பேர், வீட்டு தனிமையில் 16,065 பேர் என ஒட்டு மொத்தமாக 16,298 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    இன்று 1,597 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரத்து 758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 545 பேர் தொற்றில் இருந்து குண மடைந்துள்ளனர்.

    இதற்கிடையே புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்த 76 வயது முதியவர், நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்த 46 வயது ஆண், ஏனாமை சேர்ந்த 51 வயது பெண் ஆகிய 3 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக உயர்ந்துள்ளது.
    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    புதுச்சேரி: 

    புதுவை விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் விவசாயிகள் சங்க தலைமை அலுவலகத்தில் சங்க தலைவர் கீதநாதன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சிறப்பு தலைவர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர்  ராஜா, செயலாளர் பெருமாள்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் கொம்பாக்கம் பெருமாள்,  ராமமூர்த்தி, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளராக பல ஆண்டு காலம் செயல்பட்ட டாக்டர் துரை மாணிக்கம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய பா.ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. மாநில அரசுகள் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை இதுவரை வாபஸ் பெறவில்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவோடு அரசு பேச்சு வார்த்தையை தொடரவில்லை. 

    விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வில் தொடர்புடைய  மத்திய மந்திரியை  பதவி யில் இருந்து நீக்காமல் உள்ள பிரதமர் மோடி செயலை   கண்டிக்கின்ற வகையில் வருகிற 31-ந்தேதி நாடு தழுவிய அளவில் துரோக தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று காலை 10 மணியளவில் புதுவை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    புதுவை அரசு லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரியும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 16-ந்தேதி காலை 10 மணியளவில் காட்டேரிகுப்பத்தில் ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    புதுவை சட்டசபையில் ரங்கசாமி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சட்ட சபை வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றினார். 

    நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம்,  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார்.
    ஒரு கவர்னர் 2 மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

    புதுச்சேரி:

    தெலுங்கானா மாநில கவர்னராக இருந்து வருபவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

    இவர் புதுவை கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இன்று குடியரசு தினத்தையொட்டி அவர் புதுவை மற்றும் தெலுங்கானாவில் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை கவர்னர் தமிழிசை முதலில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த குடியரசுதின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    மேலும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தனி விமானம் மூலம் புதுவை வந்த அவர் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    ஒரு கவர்னர் 2 மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்... தமிழகம் முழுவதும் நாளை ‘பூஸ்டர்’ தடுப்பூசி முகாம் 600 இடங்களில் நடக்கிறது

    பத்ம விருதுகளை பெருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 -ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது :

    புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கொங்கம்பட்டு A.V.முருகையன், தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம், சௌகார் ஜானகி, S.பல்லேஷ் பஜன்திரி, S.தாமோதரன், R.முத்துக்கண்ணம்மாள், A.K.C.நடராஜன், டாக்டர் வீராசாமி சேஷையா ஆகியோருக்கும் மற்றும் இந்தியா முழுவதும்  பத்ம விருதுகள் பெருகின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
    புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு நாள்தோறும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று   வருகின்றனர். கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கையும் நாள் தோறும் உயர்ந்து வருகிறது. 

    புதுவையில் 24-ந் தேதி 5 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக ஆயிரத்து 911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 410, காரைக்காலில் 331, ஏனாமில் 151, மாகியில் 19 பேர்  புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 158, காரைக்காலில் 38, ஏனாமில் 12, மாகியில் 15 பேர் என 223 பேர்  தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் ஆயிரத்து 77, காரைக்காலில் 40, ஏனாமில் 19, மாகியில் 29 பேர் என ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 12 ஆயிரத்து 380, காரைக்காலில் 3 ஆயிரத்து 12, ஏனாமில் 655, மாகியில் 124 பேர் என 16 ஆயிரத்து 171 பேர் வீட்டு  தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 16 ஆயிரத்து 394 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை கல்மண்டபத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி, கோரிமேட்டை சேர்ந்த 67 வயது ஆண், திருவண்டார்கோவிலை சேர்ந்த 55வயது ஆண், திருநள்ளாறை சேர்ந்த 68 வயது மூதாட்டி என 4 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உள்பட 15 லட்சத்து 24 ஆயிரத்து 836 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:

    அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் பல்வேறு துறைகளில் பல ஆயிரம் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அதில் குறிப்பாக சுருக்கெழுத்தர் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

    ஒவ்வொரு அலுவலகத்திலும் கோப்புகள் தயாரிக்கும் பணியிலும், துறை சார்ந்த ஆய்வுகூட்டங்கள், கருத்தரங்குகள் நடை பெறும் நேரங்களில் உயரதிகாரிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவர்கள் சுருக்கெழுத்தர்கள். இவர்களின் தேவை ஒவ்வொரு துறை அலுவல கத்திலும் நீதிமன்றத்திலும் அதிகமாக உள்ளது. அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பணியிடங்கள் 2016 முதல் இதுநாள் வரை நிரப்பப்படாமல் உள்ளது.

    12.1.2016&ல் 41 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் அப்போது  தேர்தல் அறிவிக் கப்பட்டதால் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் 24.4.2017, 30.7.2020 மற்றும் 4.2.2021 என்று தொடர்ச்சியாக அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால் அதன் தொடர்ச்சி இல்லாமல் கைவிடப்பட்டது. 

    ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 சுருக்கெழுத்து காலி 
    பணியிடங்கள் உருவாகின்றன. இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் கோப்புகள் தயார் செய்வது உள்ளிட்ட நிர்வாக பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.  அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 500&க்கும் மேற்பட்ட சுருக்கெழுத்தர் தேர்வாகி வெளியே வருகின்றனர்.

    இவர்களுக்கும் தகுதியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கு தாங்கள் எடுத்த முயற்சியை போன்று  சுருக்கெழுத்தர் காலி 
    பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கையை  விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    ×