என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை மாநிலத்துக்கு ஒரு நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று வந்தார்.
பல்கலைக்கழக கருத்தாய்வு மையத்தில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். பாரதியார் நினைவு இல்லம், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றார்.
தொடர்ந்து கவர்னர் மாளிகையில் மதிய உணவருந்தினார். கவர்னர் மாளிகையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக விழா திட்டமிட்ட நேரத்தை தாண்டிச் சென்றதால் அமித்ஷாவால் இவர்களை தனித்தனியே சந்திக்க முடியவில்லை.
அதேநேரத்தில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களோடு அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து அவர் கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி பேசினார்.
அரவிந்தர் விழா, அரசு விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா இந்தியில் பேசினார். அரசு விழாவில் அவரின் பேச்சு மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நடந்த 2 இடங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அமித்ஷா பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தார். 200 நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாரை அறையிலிருந்து வெளியேற அமித்ஷா உத்தரவிட்டார். கட்சி நிர்வாகிகளிடம் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர் நிர்வாகிகளிடம், எத்தனை ஆண்டாக கட்சிப்பணியில் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிர்வாகிகளிடம், இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக என்ன பணிகளை செய்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். சிலர் பதிலளித்தனர், சிலர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.
தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய அமித்ஷா, உங்கள் பகுதியில் உள்ள மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து, நேரில் சென்று அதை தீர்த்து வையுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள். அவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களால் முடியாத பணிகளை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்த்து வையுங்கள். உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என உத்தரவிட்டார். அதோடு, கட்சி கூட்டத்தில் நாம் பேசும் விபரங்களை வெளியில் யாரிடமும் தெரிவிக்காதீர்கள் என கூறினார்.
இதனால் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த விஷயங்களை பற்றி பேசாமல் வாய்மூடி இறுக்கமாக உள்ளனர். புதுவையில் உள்ள எதிர்கட்சிகள் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியை திணிக்காதே, வாக்குறுதிகளை நிறை வேற்று என வலியுறுத்தி கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
அதேநேரத்தில் அமித் ஷாவை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் இந்தியில் அவரை வரவேற்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






