என் மலர்tooltip icon

    வேலூர்

    • மலைப்பாதையில் விடிய விடிய மயங்கி கிடந்தார்
    • சாலை வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 36) .

    இவர் நேற்று ஒடுகத்தூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மலை கிராமத்திக்கு செல்லும் வழியில் கரடுமுரடான சாலை என்பதால் சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார். விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் சிவமூர்த்தியின் வாயில் குத்தியது.

    படுகாயம் அடைந்த சிவமூர்த்தி மயக்க நிலையில் இரவு முழுவதும் ஒரே இடத்தில் மலைப்பகுதியில் விழுந்து கிடந்தார்.

    காலை வரை சிவமூர்த்தி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர்.

    மலைப்பாதை அருகே காயமடைந்து கிடந்த சிவமூர்த்தியை மீட்டனர்.

    அவரது உறவினர்கள் வாயில் இருக்கும் இரும்பு கம்பியை எடுக்க முடியாமல் இரும்பு வெட்டும் இயந்திரத்தை கொண்டு கம்பியை இரண்டாக உடைத்தார். பின்பு அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்கை அளித்து வருகின்றனர்.

    கத்திப்பட்டு மலைப்பகுதிக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலெக்டர் தகவல்
    • தன்னார்வலர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் கடந்த 2021-ம் ஆண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி என 3 நிலை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 934 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 934 தன்னார்வலர்கள் மூலம் 57 ஆயிரத்து 490 மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஊர்வலமாக கொண்டு சென்றனர்
    • பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கெங்கையம்மன் திருவிழா நேற்று நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் அம்மனுக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழா முன்னிட்டு அம்மன் சிரசு நேற்று காலையில் அங்க னாம்பள்ளி கிராமத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    கெங்கையம்மன் திருவிழாவில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குசலகு மாரிசேகர், ஊராட்சிமன்ற தலைவர்கள் கேப்டன் கேசவேலு, கவுசல்யாஉமாகாந்தன், சக்திதாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மஞ்சுநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்ரிநாத், ரமேஷ், தி.மு.க. பிரமுகர்கள் அண்ணாதுரை, ஆனந்தன், ராஜ்கமல், கிராம நிர்வாகஅலுவலர் சசிகுமார், ஊராட்சிமன்ற உதவியாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விற்பனை அறிவிப்பு பலகை சில மணிநேரத்தில் அகற்றம்
    • மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    அணைக்கட்டு:

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி விற்பனை செய்யப்படாமல் கூடுதலாக பணம் கேட்கப்படு கின்றதாக புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் சில மாதங்களாக ஆங்காங்கே உள்ள கடைகளில் கூடுதலாக மதுபாட்டில்கள் ஒன்றுக்கு ரூ. 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாட்டிலில் குறிப்பிட்டுள்ள விலையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பென்னாத்தூரில் உள்ள அரசு மதுபானக்கடை முன்பு நேற்று எம்.ஆர்.பி விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என அட்டைகளில் எழுதி தொங்கவிட்டுள்ளனர்.

    இதனை மது பிரியர்கள் வரவேற்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    ஆனால் சில மணி நேரத்திலேயே தொங்க விடப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகை சித்தர் தெருவை சேர்ந்தவர் அன்பு ஜீவ நேசன் (வயது 54).

    இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன் மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    அன்பு ஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அன்பு ஜீவ நேசனால் மகளின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் அன்பு ஜீவன் நேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பு ஜீவநேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் அன்பு ஜீவ நேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
    • பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்தப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழிக்கின்றன.

    இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.

    இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளுடன் என்னைப் பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • 2 வாரமாக உரிமையாளரை காணவில்லை

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர்.

    காட்பாடி காங்கேயநல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காட்பாடி திருநகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் ரூ.1 லட்சம் செலுத்தினால் கூடுதலாக 20 ஆயிரம், 10 மாதங்கள் வழங்குவதாக தெரிவித்தனர்.

    இதனை நம்பி நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து ரூ.46 லட்சம் முதலீடு செய்தோம்.மேலும் தீபாவளி சேமிப்பு திட்டத்தில் இந்த நிதி நிறுவனத்தில் ரூ. 43 ஆயிரத்து 500 செலுத்தினோம். ஆனால் நிதி நிறுவனத்தில் கூறியபடி லாபம் பணம் எதுவும் வழங்கவில்லை.

    இது பற்றி கேட்பதற்காக நேரில் சென்றோம். அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.கடந்த 2 வாரமாக அதன் உரிமையாளரையும் காணவில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

    எனவே நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து எங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கே.வி குப்பம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசி என்ற இளம் பெண் அளித்த மனுவில் வரதட்சணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் எடுக்கும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • போலீசார் விசாரணை
    • பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    வேலூர், சத்துவாச்சாரி அடுத்த மூலக்கொல்லை பகுதியில் நம்பிக்கை இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழ்மை மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த 2 சிறுவர் மற்றும் 2 சிறுமிகள், துணி பையுடன் நேற்று இரவு தப்பி சென்றனர். எங்கே செல்வது என தெரியாமல் 4 பேரும் வள்ளலார் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோர பிளாட்பாரத்தில் இரவு முழுவதும் தூங்கி உள்ளனர்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு, சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காப்பகத்தில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 4 சிறுவர்களையும் மீண்டும் காப்பகத்திலேயே ஒப்படைத்தனர்.

    • கண்காணிப்பாளர் புகார்
    • போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்தது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், டி என் பி எஸ் சி தேர்வு எழுதிய விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ்(27), தனது வலது காதில் பேண்டேஜ் அணிந்து வந்திருந்தார். அவர்

    தேர்வு எழுதிக்கொண்டி ருந்த போது, அப்துல் பயாஸ் தனியாக யாருடனோ பேசுவதை உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, அவர் காதில் ஒட்டி இருந்த பேண்டேஜ் அகற்றுமாறு கூறியுள்ளார்.

    அப்போது அவர் காதில் புளூடூத் பொருத்தி, அதன் வழியாக வெளியே இருக்கும் வேறு ஒருவரிடம் கேள்விக்கான விடை கேட்டு எழுதியது தெரியவந்தது.

    இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த அப்துல் பயாசை கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

    • அக்னி நட்சத்திரம் முடிந்ததும்
    • பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி

    வேலூர்:

    கத்திரி வெயில் நிறைவடைந்த நிலையில் வேலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் தொடா்ச்சியாக, அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கியது.

    இந்த நாள்களில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா்.

    இந்நிலையில், கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. எனினும், நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. பகலில் அதிகபட்சமாக 102.9 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.

    ஆனால், மாலை 4 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 5 மணிக்கு பிறகு லேசாக தொடங்கி பலத்த மழை பெய்தது.

    இந்த மழை தொடா்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்தது. அதன்பிறகும் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.

    இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிக் காணப்பட்டன. அத்துடன் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

    • 70 பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனசேகர் (47) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

    அதனைத் தொடர்ந்து, தனசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி அருகே ஜி.எஸ்.குப்பம் கிராமத்தில் மதுவிற்று கொண்டிருந்தவர்கள் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இருப்பினும், அங்கிருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிந்து தனசேகரை ஜெயிலில் அடைத்தனர்.

    • ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் விஜயகுமார் அனைவ ரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 25 நபர்களுக்கு ரூ. 63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.விஜய குமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமிநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×