என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தண்டராம்பட்டு அருகே சிங்களர்களை வென்றதை குறிப்பிடும் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம் என்னும் ஊரில் உள்ள வயல்வெளியில் அண்ணா மலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள ஆய்வு செய்த பொழுது, திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் ஆதிசிவன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியின் மத்தியில் வேப்பமரத்தின் கீழ் பலகை கல் ஒன்று இருப்பதைக் கண்டு, அங்குள்ள மக்களிடம் விசாரித்த பொழுது, அது பலகாலமாக மண்ணில் விழுந்து கிடந்ததாகவும், சில வருடங்கள் முன் அதனை எடுத்து மரத்தின் கீழ் நிறுவியதாகவும் தெரிவித்தனர்.

    மண்ணில் பலவருடம் இருந்ததால், கற்பலகை மிகவும் அரித்து கருப்பாகக் காட்சி தந்தது. அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் விஜயநகர காலத்திய எழுத்து தென்பட்டது.

    சுமார் 5 அடி உயரமும் 3 அகலமும் கொண்ட இப்பலகை கல்லில் முதல் பாதியில் இடது புறம் சூரிய சந்திரருடன் திருவண்ணாமலை கோயிலுக்குத் தரப்பட்ட தானத்தைக் குறிக்கும் சோணாசலகிரியும், நடுவில் சூலம் மற்றும் வலது புறத்தில் இரு குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் உள்ள மீதி பாதியில் 16/ 17ம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.

    கல்வெட்டு செய்தி : ஸ்ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டு சோழர் களையும் சிங்களவர் களையும் வென்றதாக வெற்றி செய்தியைக் குறிப்பிட்டு "இராவிந குமாரர் வேங் இராச" என்பவர் வக்கையூர் என்ற ஊரைத் தானமாக அளித்து அதன் மூலம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும் 20 வெற்றிலையும் அடங்கிய அடைகாய அமுது அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்வூரைச் சேர்ந்த மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார் என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார்.

    இக்கல்வெட்டில் பெரும் பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு மன்னர் பெயர் மற்றும் காலம் தெளிவாகத் தரப்படவில்லை. எனினும் இக்கல்வெட்டில் பயின்று வரும் "வேங்" என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராகக் கருதலாம் என்று இக்கல்வெட்டைப் படித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

    பிற்கால விஜயநகர ஆட்சியில் இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586&1614) மற்றும் மூன்றாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1632-1642) என்று இருவர் உள்ளனர். மூன்றாம் வேங்கடபதி ராயர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு முந்நூறு வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் காலம் முழுவதும் போரில் கழிந்ததாக வரலாறு கூறுகிறது.

    முதலாம் ஸ்ரீரங்கா ஆட்சியில் பெரிதும் வீழ்ச்சி கண்ட விஜயநகர சாம்ராஜியத்தை மீட்டு எடுத்து விஜயநகர பேரரசின் இரண்டாம் பொன் அத்தியாயத்தை எழுதி சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) காலத்தில் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்குக் கொடை வழங்கி இருந்தாலும் குறிப்பாகத் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலுக்குப் பல கொடைகள் வழங்கி யுள்ளதை இக்கோவிலில் பதிவாகியுள்ள 9 கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே இவரின் காலத்தில் தான் இத்தானம் வழங்கி இருக்ககூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

    சுமார் 400 வருடம் பழமையான இக்கல்வெட்டு மூலம் திருவண்ணாமலையைச் சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்குக் கொடை பெறப்பட்டது போலவே இவ்வூரிலிருந்தும் தரப்பட்ட தானத்தை அறியமுடிகிறது.
    கொரோனா விதிமுறைகளை மீறி நாடகம் நடத்திய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை கிராமத்தில் கடந்த  16-ந்தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 

    இதனை மீறி நாடகம் நடைபெறுவதாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று பார்த்த போது நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

    பின்னர் நாடகம் ஏற்பாடு செய்த  10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே உள்ள உத்தமராய பெருமாள் கோவிலில் மகர உற்சவ விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலைமீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் 4-ந் தேதி (நேற்று 17-ந் தேதி) மகர உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கொரனோ கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

    இதனால் நேற்று அதிகாலை கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றபின் கோவில் மூடப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகைதந்து பூட்டப்பட்ட கோவில் கிரில் கேட்டில் துளசி மற்றும் மலர் மாலைகள் சாத்தி, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, கோவிந்தா!கோவிந்தா!என பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். 

    இவ்விழாவிற்காக வியாபாரிகள் நடைபாதைக்கடைகள் வைத்திருந்தனர்.
    கோவளம் பள்ளியில் தங்கி படித்த பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கியது தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கரையான்செட்டி தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் மகாபலிபுரத்தில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிவிடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கொரோனா விடுமுறை காலங்களில் தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவி அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தார்.

    இதுபற்றி அறிந்த விடுதி வார்டன் செண்பகவள்ளி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாணவியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் "உனது வயிற்று வலிக்கு என்ன காரணம்?" என்று கேட்டபோது, பதில் சொல்ல மறுத்த மாணவி, எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது டாக்டர்கள் செய்த பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து மாணவி படித்து வந்த உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு சுய நினைவு திரும்பியது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தனது கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் பெயரை எழுதிக் காண்பித்தார்.

    இதைத்தொடர்ந்து மாணவி வசித்துவரும் தெருவில் குடியிருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 31) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. ஹரிபிரசாத் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தன்னிடம் நட்பாக பழகிய மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கைதான ஹரிபிரசாத் காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானது குறித்து குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக விடுதி வார்டன் செண்பகவள்ளி, மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    போளூர்:

    போளூர் அடுத்த 11வது வார்டு தானே பெருமாள் தெருவில் உள்ள பொது குழாய் தண்ணீர் தொட்டி தொடர்பைத் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கேட்டபோது இன்னும் 2 நாட்களில் சரி செய்து விடுகிறோம் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கூறினார். ஆனால் 15 நாட்கள் ஆகியும் அந்த தெருவில் குடிநீர் இணைப்பு பொதுக்குழாயை சரிசெய்யவில்லை. இதனால் 50 மேற்பட்ட பொதுமக்கள் காலி குடத்துடன் பேரூராட்சி அலுவலகம் முன் சுமார் ஒரு மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் சென்று புகார் மனு ஒன்றை பொதுமக்கள் சார்பாக அளித்தனர். இதனால் பேரூராட்சி அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி பலியான சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சு.கம்பம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாபூப் கான்.இவரதுமகள்களான நஸ்ரின் (வயது15) நசீமா (15) ஷாகீரா (12) ஆகியோர் நேற்று முன்தினம் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்ற ஆட்டுக் குட்டியை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    அவர்கள் உடல்கள் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் எ.வ.வேலு சிறுமிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
    அவர் கூறுகையில்:& இந்த கிராமத்தையொட்டி உள்ள ஏரியில் 3 சிறுமிகள் மாட்டு பொங்கல் அன்று ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக ஓட்டிச் சென்றபோது ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு  சென்று இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பிச்சாண்டியிடம் விசாரணை நடத்த கூறினார்.

    தற்போது மாவட்ட கலெக்டர் நிதியில் இருந்து பலியான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், டாக்டர் கம்பன், கூடுதல் கலெக்டர் பிரதாப், ஆர்.டி.ஓ.வெற்றிவேல், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தை மாத பவுர்ணமி தினமான இன்றும், நாளையும் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று அதிகாலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் பின்னர் போலீசார் தடுப்புகளை வைத்து கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தடையை மீறி பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் சென்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதனால் கிரிவல பாதையில் பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். 
    ஆரணியில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஆரணி:

    ஆரணியில் நேற்று முழு ஊரடங்கு தடையை மீறி வீதிகள் சுற்றி திரிந்த 33 இருசக்கர வாகனங்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பறிமுதல் செய்த வாகனங்களை வாகன உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
    மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மறியல் நடந்தது.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் இறப்பு ஏற்பட்டால் வடகரை நம்மியந்தல் மாதா கோவில் வழியாக பிணத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலனி பகுதியில் பெண் ஒருவர் இறந்தார். சுடுகாட்டு பாதை தற்போது சரியில்லை. அதனால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு பகுதியில் இறந்த பெண்ணின் பிணத்தை எடுத்து செல்ல முடிவு செய்திருந்தனர்.

    இதற்கு வீரளூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து சென்றால் பல்வேறு பிரச்சனைகள் எழும் எனவே தற்போது செல்லும் பாதையிலேயே செல்லட்டும் என்று கூறினர்.

    மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மறியல் நடந்தது.

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், ஆரணி கோட்டாட்சியர் கவிதா, கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் நள்ளிரவில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நடந்தது.

    அப்போது சுடுகாட்டு பாதை விரைவில் சீரமைக்கப்படும். அதுவரை மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று இறந்த பெண் உடல் மெயின் ரோடு வழியாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

    பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்து மேலும் மணல் கடத்தல் ஈடுபட்ட விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். 

    மேலும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    பெரணமல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். பரத்குமார் இஞ்சிமேடு கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பெரணமல்லூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது வடுவன்குடிசை சுடுகாடு பகுதி அருகே ஆட்டோ வந்தபோது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரத்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

     அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமார் இறந்தார். 

    இதுகுறித்து பரத்குமாரின் தந்தை அன்பு பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் காணும் பொங்கல் கொண்டாட்டம் “களை’’ இழந்தது.
    திருவண்ணாமலை:-

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது.
    திருவண்ணாமலையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம் பகுதிகளும் வெறிச்சோடியது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.  இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான காணும் பொங்கல் விழா இன்று நடைபெறும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இதனால் பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. 

    ஆண்டுதோறும் குடும்பத்துடன் கோவில் மற்றும் சுற்றுலா இடங்களான பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உணவுகளை எடுத்துச் சென்று உண்டு மகிழ்வார்கள். 

    மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கு வார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் களைகட்டும். 

    ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கலை கொண்டாட வெளியில் செல்ல முடியாது என்பதால் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

    திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக எந்த நேரமும் பொதுமக்கள் கூட்டமாக காணப்படும் ஆலங்காயம் மெயின் ரோடு, பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, பெரிய தெரு, ஆகிய பகுதிகளில்வெறிச்சோடி உள்ளது.

    சாலைகள் பொது மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்துள்ளனர். 

    அவ்வழியாக வருபவர்களை விசாரித்து  அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வருபவர்களை செல்ல அனுமதி அளித்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
     
    இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், கந்திலி, உமராபாத் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஊரங்கால் சாலைகள் வெறிச்சோடியது. போலீசார் கண்காணித்து வந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

    போலீசார் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
    ×