என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 வகுப்புக்கு இன்றுடன் (புதன்கிழமை) தேர்வு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர். பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    • தனியாக வசித்து வந்தார்
    • மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பழைய காலனியை சேர்ந்த முத்துசாமியின் மனைவி நல்லசெல்லம் (வயது 60). தனியாக வசித்து வந்த நல்ல செல்லம் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.இந்த நிலையில் நல்ல செல்லம் மனநிலை பாதிக்கப்பட்டது போல் யாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். வீட்டில் இருந்த நல்ல செல்லம் திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நல்ல செல்லத்தின் உடல் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்ல செல்லம் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.

    • முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
    • பள்ளி வகுப்பறையை பிளஸ்-2 மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் தேர்வு முடிந்த பின்னர், தங்களது வகுப்பறையில் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சேட்டையில் ஈடுபட்டு செல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன.அவ்வாறு இல்லாமல் பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணித பிரிவு வகுப்பு மாணவர்கள் 28 பேர் நேற்று முன்தினம் தங்களுக்கு தேர்வு முடிந்தாலும், நேற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு வருகை தந்து தங்களது வகுப்பறையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் அவர்கள் கரும்பலகைக்கு வண்ணம் பூசி, வகுப்பறை சுவருக்கு வர்ணம் தீட்டினர். மேலும் அவர்கள் தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை மாட்டி விட்டு சென்றனர். அந்த மாணவர்களின் செயலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரமும் பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."

    • பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
    • செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில், அருகே உள்ள மலையில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நாதன் என்பவர் உடைத்து சேதப்படுத்தினார்.அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டும் முறையாக முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனால் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    • கடந்த பதிமூன்று வருடங்களாக யாசக பணத்தை பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார்
    • நானூறு பள்ளிகளுக்கு உதவி செய்துள்ளார்

    பெரம்பலூர்,

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆழங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (வயது 73) என்பவர் வந்தார். அவர், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் சென்றார். இது குறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை 35 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி, மாவட்ட கலெக்டரிடம் ரசீதை கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

    • ஊர்வலத்தை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.
    • கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட ஊர்வலத்தை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், ஓய்வூதியம் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நகைக்கடன் ஏலத்தில் நஷ்டம் என்று பணியாளர்களை பழிவாங்குவதை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கால தாமதமின்றி கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியவாறு சென்று, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்

    https://www.dailythanthi.com/News/State/inaugural-cooperative-bank-employees-attention-procession-934791

    • சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மாற்றம்
    • போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி தகவல்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள சிறுவாச்சூர் கிரா–மத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு நாளை (5-ந்தேதி) மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழா வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.எனவே மக்களின் பயன் பாட்டிற்காகவும், போக்குவரத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம் பலூர் 4 ரோட்டில் இருந்து இடது புறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்லுமாறும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்காக திருச்சி மற்றும் தென் மாவட்டங் களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்பு உள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் வாகனங்களை நிறுத்தவும்,துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் புதுவேலூர் சாலையிலுள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் வலது புறமாக திரும்பி வலது புறமுள்ள கிராமசாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • புத்தகப்பிரியர்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது
    • புத்தக திருவிழாவில் நடைபெற்ற புத்தக அரங்கிற்கு கலெக்டர் தலைமை வகித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நகராட்சி திடலில் புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக பிரியர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். மேலும் புத்தக திருவிழாவில் நேற்று இரவு நடந்த சிந்தனை அரங்கிற்கு கலெக்டர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது கலந்து கொண்டு பேசினார். மேலும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிற தலைப்பில் கவிதை பித்தனும், பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு என்கிற தலைப்பில் மல்லூரியும், என் குறிப்பு என்கிற தலைப்பில் தாமோதரனும் கருத்துரையாடினர்.

    • திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்கொலை
    • ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி சிவரஞ்சனி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ராஜகோபால் அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருவத்தூர் போலீசார் ராஜகோபாலை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இவ்வழக்கு குறித்து மேல் விசாரணைக்காக பெரம்பலூர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பண பரிசு வழங்கப்பட்டது
    • 28அணிகள் கலந்து கொண்டு விளையாடின

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இறகு பந்து போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தின் உள்ளரங்கில் நேற்று நடந்தது. ஆண்களுக்கு இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3, 4-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது
    • முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை ஆகிய வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 8.30 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவர் முருகருக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் அலங்கார பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணியளவில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை தேர் மீண்டும் நிலைக்கு வருகிறது. வருகிற 8-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகி்ன்றனர்.

    • பெண்கள் அதிகளவில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்போது நாற்று பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

    பெரம்பலூர்  மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதை தொடர்ந்து கோடை நடவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாய கூலி தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடவு பணிக்காக நாற்று பறிக்கும் பணி தற்போது அப்பகுதியில் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்த விவசாய பணிக்கு அதிகளவுவில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். 

    ×