என் மலர்tooltip icon

    நீலகிரி

    பாரம்பரிய இசையுடன் நடந்தது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இன்னமும் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விவசாயிகள் மே மாத கோடை சீசனுக்கு அறுவடை செய்யும் வகையில் மார்ச் மாதத்தில் விதைகளை விதைப்பது வழக்கம்.இவ்வாறு தாங்கள் விதைக்கும், விதைகள் நல்ல மகசூல் தரவேண்டும் என்பதற்காகவும், விவசாயத்தின்போது நல்ல மழை பெய்து நல்ல லாபம் கிடைக்க வேண்டும், 

    கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைக்க வேண்டும் என்பத ற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் 2-வது வாரத்தில் படுகர் சமுதாய மக்களின் மேற்குநாடு சீமைக்கு உள்பட்ட ஊட்டி அருகே உள்ள அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் விதை விதைப்புத் திருவிழா நடத்துவது வழக்கம். இதன்படி விதை விதைப்புத் திருவிழா அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று நடைபெற்றது

     இந்த திருவிழாவில் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய உடையான வெண்ணிற உடை அணிந்து தங்களின் பாரம்பரிய இசையைப் பெண்கள் பாட, ஆண்கள் நடனமாடி விதை விதைப்பின்போது நல்ல மழை பெய்து, நல்ல மகசூல் தர வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினர்.

     அப்போது, கால்நடைகளுக்குத் தேவையான உணவு, விவசாயிகள் நோய் நொடியின்றி விவசாயம் செய்ய சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விதைகளை விதைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கினர்.
    பழமையான வாகனங்களை விற்காமல் பாதுகாப்பாக வைத்து வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று டிப்ளமோ என்ஜினீயரிங் மாணவர் ரோ‌ஷன் கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் அந்த பகுதியில் பூட்டு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மகன் ரோ‌ஷன்(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே பழமையான கார், மோட்டார் சைக்கிள்கள் சேகரிக்கும் பழக்கம் உடையவர்.

    2-ம் உலகப்போரில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர் ஆகியவைகளை சேகரித்து வைத்துள்ளார். மினியேச்சர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் இவர் அதனை தனது வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார்.

    அவர் இருசக்கர வாகன என்ஜினை கொண்டு ஒரு சிறிய கார் தயாரித்துள்ளார். இது தவிர தான் கற்ற கல்வி மூலம் ஒரு புதிய மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.

    பெரிய கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிறிய காரில் உள்ளது. இருவர் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சிறிய ரக காரை அவர் வடிவமைத்துள்ளார். இதில் அடிக்கடி நகர் வலம் வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

    மாணவர் தயாரித்த சிறிய அளவிலான மோட்டார் சைக்கிள், கனரக வாகனம், கார் ஆகியவற்றை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து ரோ‌ஷன் கூறியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த பழங்கால அணிவகுப்பில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது ஒரு காரை இயக்கி புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்து விட்டனர்.

    இதையடுத்து பழமையான மோட்டார் சைக்கிள்களை சேகரிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் 1946-ம் ஆண்டில் தயாரித்த ஆர்டி மோட்டார் சைக்கிள், ஜப்பானில் 1985-ம் ஆண்டு தயாரித்த ஆர்டி350 மோட்டார் சைக்கிள், செக்கோஸ்லோவியா நாட்டில் தயாரித்த ஜாவா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் தனியே அமரும் வகையில் இணைக்கப்பட்ட லேம்பி 150 வகை உள்பட 12 மோட்டார் சைக்கிள்கள் சேகரித்து உள்ளேன்.

    மகாத்மா காந்தி காலத்தில் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் இயக்கும் 3 சைக்கிள்களை சேகரித்து புதுமையாக வைத்துள்ளேன். மோட்டார் சைக்கிளின் 2 என்ஜின்களை கொண்டு சிறிய கார் தயாரித்தேன். அந்த கார் பெட்ரோல் மூலம் இயங்குகிறது.

    பழமையான வாகனங்களை விற்காமல் பாதுகாப்பாக வைத்து வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பணிச்சுமையால் தான் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குன்னூர்:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சரவணன்(வயது40). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் டேன் டீ அலுலகத்தில் உதவி கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு  திருமணம் நடந்தது.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். மீனாட்சி சரவணன் குன்னூரில் உள்ள டீ குடியிருப்பில் வசித்து வந்தார்.

    நேற்று வெகுநேரமாகியும் இவர் பணிக்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, அவர் வீட்டிற்குள் இருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    உடனடியாக அவர்கள் குன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் கூறினர். 

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீனாட்சி சரவணன் பணிசுமையால் அதிக மன உளைச்சலில் இருந்தார். இதனால் வேலையை விட்டு செல்வதாக அவர் கடிதமும் கொடுத்தார். ஆனால் அதிகாரிகள் அதனை கிழித்தெறிந்து விட்டனர். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார். ஆனால் இந்த முடிவை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தனர்.

    இதற்கிடையே அவர் பணிச்சுமையால் தான் தற்கொலை செய்தாரா? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    2.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்து வருகின்றனர்.

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பெட்போர்டு, மவுண்ட் சாலை பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின்போது 9 கடைகளில் இருந்து 7.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.15,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் நீலமேகம் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 5  வணிக நிறுவனங்களிடம் இருந்து சுமார் 2.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து ரூ. 4,800 அபராதமாக வசூலித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.19,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் கொட்டரகண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    பகல் நேரங்களில் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளைகளில் உணவு தேடி குடியிருப்புகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணை மற்றும் உணவு பொருட்களை சூறையாடியது.

    மேலும் அடுப்பையும் உடைத்து தள்ளிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் கொட்டரகண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மலைபிரதேசமான ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குபின் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு அனுமதியுடன் நடந்து வருகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சினிமா படம் இங்கு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை.

    இந்த நிலையில் 1 வருடத்திற்கு பிறகு நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

    ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், நடிகர் முகேன்ராவ், நடிகை ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் காட்சிகள் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் படமாக்கப்பட்டது.

    இதற்காக மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கல்லறை காட்சியில் முகேன் ராவ் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகளும், அங்கு அவர் காரில் வருவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.

    பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் நடிகர் முகேன் ராவுடன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, பெயரிடப்படாத திரைப்படம் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் சில நாட்கள் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    ஊட்டி:

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், அதிகரட்டி மற்றும் பல இடங்களில்  பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி “பாரத் மாதாகி ஜே” என்ற முழக்கத்துடன் கொண்டாடினர். 

    ஊட்டியில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையிலும், குன்னூரில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், நகர தலைவர் குங்குமராஜ், வர்த்தக அணி தலைவர் என்.எஸ்.சரவணன்  தலைமையிலும் கோத்தகிரியில் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஜே.குமார்  தலைமையிலும்   கொண்டாடப்பட்டது
    சி.ஐ.டி.யூ செயலாளர் ரமேஷ் தொடங்கிவைத்தார்
    ஊட்டி:

    எல்.ஐ.சி.யின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை எதிர்த்து ஊட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

    போராட்டத்தில், ஊட்டி கிளையின் தலைவர் ஏ.கோபால், செயலாளர் தினேஷ்ராஜ், 7 பெண் ஊழியர்கள் உள்பட 21 பேர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யூ செயலாளர் ரமேஷ் தொடங்கிவைத்தார்.இதில், சி.ஐ.டி.யூ பொறுப்பாளர்  சங்கரலிங்கம், முகவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    உரம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு மொத்த கடன் தொகையில் 25 சதவீதம் உரத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த உரத்தை உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பெற்றுக் கொள்ள அனுமதி சீட்டு கொடுக்கப்படுவது வாடிக்கையாகும். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் உரத்தை பெற்று கொள்ளும் வகையில் அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி நீலகிரி கூட்டுறவு விற்பனை  சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படவில்லை. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டியும் உர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு அமைப்புகளில் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகள் கடந்த வாரத்தில் கூட்டுறவுச் சங்க அதிகாரிகளைச் சந்தித்து நேரில் முறையிட்டபோது அவர்களுக்கு நேற்று உர விநியோகம் செய்யப்படும் எனக் கூறி அதற்காக புதிதாக அனுமதிக் கடிதத்தையும் கொடுத்தனர்.

    இதையடுத்து நேற்று காலை நூற்றுக்கணக்கான விவசாயிகள்   சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க கிடங்குக்கு வந்தனர். ஆனால் அங்கு வந்த அலுவலர்கள், தங்களுக்கு வந்து சேர வேண்டிய உரம் இன்னும் வரவில்லை எனவும், உர விநியோகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அப்பகுதியில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
    ஊட்டி:

    இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 2020-ம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது நீலகிரி மாவட்ட கட்டபெட்டு  மந்து பகுதியைச் சேர்ந்த  தோடர் இன பெண்கள் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகியோருக்கு ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    தொழில்முனைவோர், விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.இதில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கட்டபெட்டுவில் வசிக்கும் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகிய பழங்குடி பெண்கள் இவர்களின் மூதாதையர்களின் பழக்கம், பண்பாடுகளை இன்றளவும் நினைவூட்டும் வகையில் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தியதற்கும், பாரம்பரிய மிக்க சிறப்புகளை இன்றளவும் பாதுகாத்து உலகளாவிய சந்தையில் விற்பனை மேற்கொண்டு அதற்காக புவிசார் குறியீடு பெற்றதற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டத்துக்கு வந்த இவர்களை கவுரவிக்கும் வகையில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் செயலாளர் ஆல்வாஸ், பண்டைய பழங்குடியின பேரவைச் செயலாளர் புஷ்பகுமார், நாவா கண்காணிப்பாளர் மனோகரன் சார்பில் விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் நினைவு தொடக்கப் பள்ளி மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    விளையாட்டு வீரர்கள் பிரார்த்தனை
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கேத்தி அருகே உள்ள சி.எஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ரஷ்யா&  உக்ரைன் போர் நின்று இரு நாடுகள் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என சீன பாதிரியார் ஆர்தர் பெயரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. 

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது. ஒவ்வொரு போட்டி களுக்கு முன்பும் ரஷ்ய -உக்ரைன் போர் சமாதான மாக முடிய சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது. 

      இந்த போட்டிகள் பற்றி  கல்லூரி தாளாளர் நேச மெர்லின் கூறுகையில், உக்ரைன் -& ரஷ்யா இடையே நடந்து வரும் போரானது நின்று சமாதானம் நிலவ வேண்டி போட்டிகள் நடைபெற்றது.  மின்னொளியில்    நடைபெற்ற  இந்த கால்பந்து போட்டியில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உற்சாகமாக விளையாடியதாக தெரிவித்தார். 

    இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜோஷ்வா ஞானசேகர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

     இறுதி போட்டியில் நீலகிரி பைசன் அணியும்,   சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி அணியும்  மோதிய போட்டியில் நீலகிரி பைசன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன்  பட்டதை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையும்.  பரிசு தொகையையும் தாளாளர் நேசமெர்லின் வழங்கினார்.
    சாலை வசதி, தடுப்புச்சுவர், நடைபாதை, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்றத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நடுஹட்டி பகுதியில் உள்ள   அட்டவளை, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். 

    இங்கு சாலை வசதி, தடுப்புச்சுவர், நடைபாதை, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்றத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடுஹட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் கூறியதாவது:

    இந்த  கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் கிராமத்துக்கும், பிரதான சாலைக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைப் பகுதியிலேயே செல்ல வேண்டி இருக்கிறது.வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் பயணிக்கவும், இறப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் போதும் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    குறிப்பாக சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எந்த அடிப்படை வசதியும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,   அரசு உடனடியாக  நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றனர். 

    இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ×