என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குன்னூரில் டேன்டீ கணக்காளர் தற்கொலை

    பணிச்சுமையால் தான் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குன்னூர்:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சரவணன்(வயது40). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் டேன் டீ அலுலகத்தில் உதவி கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு  திருமணம் நடந்தது.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். மீனாட்சி சரவணன் குன்னூரில் உள்ள டீ குடியிருப்பில் வசித்து வந்தார்.

    நேற்று வெகுநேரமாகியும் இவர் பணிக்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, அவர் வீட்டிற்குள் இருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    உடனடியாக அவர்கள் குன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் கூறினர். 

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீனாட்சி சரவணன் பணிசுமையால் அதிக மன உளைச்சலில் இருந்தார். இதனால் வேலையை விட்டு செல்வதாக அவர் கடிதமும் கொடுத்தார். ஆனால் அதிகாரிகள் அதனை கிழித்தெறிந்து விட்டனர். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார். ஆனால் இந்த முடிவை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தனர்.

    இதற்கிடையே அவர் பணிச்சுமையால் தான் தற்கொலை செய்தாரா? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×