என் மலர்
ஈரோடு
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் ஈஸ்வரன் (34). விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரனுக்கும், சரண்யா (28) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மழை வந்ததால் துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு ஈஸ்வரன் மனைவி சரண்யாவிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார்.
அதை பார்த்த சரண்யாவும் அதே பூச்சி மருந்து பாட்டிலை பிடுங்கி குடித்து உள்ளார். பூச்சி மருந்தை குடித்து கணவன், மனைவி 2 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்த கருப்பணன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். ஈஸ்வரன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
குமாரசாமி கால் வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அப்போது அவருக்கு தெரிந்தவர்கள் நாட்டு வைத்தியர் ஒருவர் இருக்கிறார். அவர் மருந்து கொடுத்தால் எளிதில் குணமாகிவிடும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து குமாரசாமி நாட்டு வைத்தியரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். அதன்படி சம்பவத்தன்று குமாரசாமியின் வீட்டுக்கு நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு ஒரு வாலிபர் வந்தார்.
அவர் குமாரசாமியிடம் உங்கள் கால் வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். குமாரசாமியும் இதை நம்பினார்.
இந்நிலையில் நாட்டு வைத்தியர், குமாரசாமி மற்றும் அவரது மனைவி, மகன் மீது பவுடர் போன்ற ஒரு மயக்க பொடியை கலந்து அவர்களது மீது தடவினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மயங்கி விட்டனர்.
பின்னர் அந்த நாட்டு வைத்தியர், குமாரசாமி வீட்டில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்க தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டு வைத்தியர் இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது பணம்-நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது
பின்னர் தன்னை ஏமாற்றி நாட்டு வைத்தியம் பார்ப்பதாக வந்த நபர் வீட்டில் திருடிச் சென்றது குறித்து குமாரசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நாட்டு வைத்தியர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.






