என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு அருகே குடும்ப தகராறில் கணவருடன் விஷம் குடித்த இளம்பெண் பலி

    ஈரோடு அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் ஈஸ்வரன் (34). விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரனுக்கும், சரண்யா (28) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மழை வந்ததால் துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு ஈஸ்வரன் மனைவி சரண்யாவிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார்.

    அதை பார்த்த சரண்யாவும் அதே பூச்சி மருந்து பாட்டிலை பிடுங்கி குடித்து உள்ளார். பூச்சி மருந்தை குடித்து கணவன், மனைவி 2 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்த கருப்பணன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். ஈஸ்வரன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×