என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே குடிபோதையில் புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுபடி லேடிஸ் பஸ்ட், ஹலோ சீனியர் ஆகிய காவல் உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் உடனடியாக காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விருத்தாசலம் குமராட்சி மேல நெடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த சினேகா (வயது 20). இவர் மேற்கண்ட காவல் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு திருமணமாகி 6 மாதங்களில் கணவர் குடித்துவிட்டு அடித்து பிரச்சினை செய்வதாக புகார் தெரிவித்தார்.

    அதன்படி குமராட்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மனைவிடம் பிரச்சினை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி லட்சுமி என்பவர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு நபர் தன்னுடைய இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பழனிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சம்பந்தப்பட்ட மூதாட்டி லட்சுமிக்கு எந்தவித பிரச்சினையும் செய்யக்கூடாது என அந்த நபரை கடும் எச்சரிக்கை செய்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஏதேனும் பிரச்சனை நடந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என மூதாட்டியிடம் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இந்த காவல் உதவி எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
    கடலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள 152 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

    இதனைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள 152 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில் 121 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம்பெண் கடத்தியதாக டீக்கடைக்காரர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கீழ்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது 17 வயது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்தில் தேனீர் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் இருந்த போது திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவரது மகள் கிடைக்கவில்லை.

    எனவே சிவகுமார் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை டீக்கடை நடத்தி வரும் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடத்தி சென்று உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
    கடலூர், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையுடன் தொடங்கி மழை தொடர்ந்து பெய்து வந்தது.

    கடலூர்:

    மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். மேலும் நாளை (13 -ந்தேதி) முதல் 15- ந்தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையுடன் தொடங்கி மழை தொடர்ந்து பெய்து வந்தது.

    கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு மதியம் சுட்டெரிக்கும் வெயில் மாலை குளிர்ந்த காற்று என்ற சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே பொதுமக்களுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காணமுடிகிறது.

    மேலும் சாலை ஓரங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி இருக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:-

    பரங்கிப்பேட்டை- 92.6, புவனகிரி- 91.0, சிதம்பரம்- 89.8, அண்ணாமலைநகர்- 83.2, காட்டுமன்னார்கோயில்-64.0, கொத்தவாச்சேரி- 54.0, லால்பேட்டை- 50.6, சேத்தியாதோப்பு- 49.2, கடலூர்- 18.8, கலெக்டர் அலுவலகம் - 18.8 ஸ்ரீமுஷ்ணம்- 14.2, குறிஞ்சிப்பாடி- 10.0, பெல்லாந்துறை- 8.6, வானமாதேவி- 7.0, குப்பநத்தம்- 5.2, விருத்தாசலம்- 4.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி- 4.0, பண்ருட்டி- 3.3, வடக்குத்து-3.0, மீமாத்தூர்-2.0, காட்டுமயிலூர்-1.0, வேப்பூர்-1.0, என மொத்தம் 675.30 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடியை அடுத்துள்ள போத்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சக்தி முருகன் (வயது 29). இவருக்கும், இவரது உறவினர் சேலம் மாவட்டம் வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் நேற்று போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இது பற்றிய தகவல் மாவட்ட சமூக நலஅலுவலருக்கு கிடைத்தது. இச்சம்பவம் குறித்து அவினங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆவினங்குடி போலீசார் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
    திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் முன்பு உள்ள மலை மீது வைத்து திருமணம் நடத்த இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

    இருப்பினும் கோவில் முன்பு உள்ள சாலையில் வைத்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றது.

    அந்த வகையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதில் கோவில் அருகே உள்ள சாலையில் அமர்ந்தே, சாமியை தரிசனம் செய்து புதுமண ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதில் கோவில் சாலையில் வைத்து 80 திருமணங்களும், அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணமண்டபத்தில் 40 திருமணங்கள் என்று நேற்று ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    இதற்கிடையே காலையில் பக்தர்கள் யாரும் காலை 8 மணிவரைக்கும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
    தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி 55. இவருக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சக்கரவர்த்தி தன்னுடைய நிலத்தை அளவீடு செய்வதற்காக விருதாச்சலம் நில அளவை பிரிவில் அளவீடு செய்து  தருமாறு மனு கொடுத்துள்ளார்.

    மேலும் அதற்கு உண்டான பணத்தையும் கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து நில அளவையாளர்கள் நிலத்தை அளப்பதற்காக சென்றபோது அந்த தனிநபர்கள் தடுத்ததால் அவர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தனிநபர்கள் சக்கரவர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடன்  அவரை போலீசார் சமாதானப்படுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய தாசில்தார் தனபதி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மழை காரணமாக மோகூர், ரெட்டியூர், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏக்கர் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
    காட்டுமன்னார்கோவில்:

    தமிழகம் முழுவதும் கடலோர பகுதியில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக லால்பேட்டை, குமராட்சி, ஆயங்குடி, முட்டம், தில்லைநாயகபுரம், உடையூர், கருநாகநல்லூர், திட்டமல்லி, திருச்சின்னபுரம், மானியஆடூர், அரசூர், ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் பன்னீர் தெளிப்பது போல மழை தூறியது.

    இந்த மழை காரணமாக மோகூர், ரெட்டியூர், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏக்கர் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பண்ருட்டியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.90 ஆயிரம் பணத்தை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    தமிழகம் முழுவது நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் மற்றும் வெகுமதிகள் வழங்குவதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டு பறக்கும் படைகள் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி பண்ருட்டி நகராட்சி திருவதிகை ஹவுசிங்போர்டு அருகில் பறக்கும் படை தாசில்தார் செந்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது கடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூரை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.90ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை பண்ருட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ்வரியிடம் ஒப்படைத்தனர்.
    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.

    அதன்படி தற்போது நெல் அறுவடை ஓரளவு முடிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வடவாறு வழியாக வரக்கூடிய நீர்வரத்து வீராணம் ஏரிக்கு நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 44.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.

    சென்னை மாநகர் குடிநீருக்காக நேற்று 63 கனஅடி நீர் அனுப்பப்பட்டது. அது இன்று 62 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் சென்னைக்கு அனுப்பக்கூடிய அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    கடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாவட்ட தேர்தல் அலு வலரும், கலெக்டருமான பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் தங்கள் பெயர் மற்றும் சின்னம் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதனை பார்வையிட்டனர்.

    வடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 58 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும், மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என சம்பள பிடித்தம் செய்யப்படுவதாகவும், தினம் இரவு கால தாமதமாக வீட்டிற்கு அனுப்புவதாக புகார் எழுந்தது.

    எனவே தூய்மை பணியாளர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இது போன்று நடக்காது. ஞாயிற்றுக்கிழமைகளில் பாதி சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
    ×