என் மலர்tooltip icon

    அரியலூர்

    விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் சத்தியசீலன் (வயது 27). இவர் சம்பவத்தன்று கீழப்பழுவூர் அருகே உள்ள சுண்டக்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அந்த வழியாக வந்த மினி பஸ் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சத்தியசீலன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மொத்தம் 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,013 ஆக உயர்ந்துள்ளது. இதில் 78 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலா 55 வயதுடைய ஆண்கள் 2 பேரும், 65 வயதுடைய பெண் ஒருவரும், ஆண்கள் 2 பேரும், 59 வயதுடைய ஆண் ஒருவரும், 60 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,693 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,235 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கொரோனாவினால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரியலூர் அரசு மருத்துவமனையில் தான் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமைப் பணியாளர்களான பத்திரிகை வினியோகிக்கும் நபர்கள், பால் வினியோகம் செய்பவர்கள், தள்ளு வண்டி வியாபாரிகள், மருந்து கடைகளில் பணிபுரிவோர், ஆட்டோ டிரைவர்கள், கண்டக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள், உணவு வினியோக பணியாளர்கள், அத்தியாவசிய தொழிற்சாலை பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊடகத்தினர், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வினியோகம் செய்யும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 2-வது நாளாக நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இப்பணியை ஜெயங்கொண்டத்தில் மாவட்ட கலெக்டர் ரத்னா, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    தேவைப்படும் உதவிகளை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்து கொடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் கருதி முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04329-228840 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444437170 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தேவைப்படும் உதவிகளை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்து கொடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூரில் நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
    அரியலூர்:

    அரியலூரில் காய்கறி விற்பனை மந்தமாக இருந்தது. அரியலூரில் மொத்த காய்கறி கடைகளை திறந்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 5 மணி முதல் 6 மணி வரை மினி லாரிகளில் காய்கறிகளை வாங்கி, தெருக்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கபட்டவர்களுக்கு மட்டும் காய்கறிகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி அங்கு நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. மந்தமாகவே இருந்தது.

    மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன், நரிக்குறவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கினார். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்தனர். மேலும் 264 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,575 ஆக உயர்ந்துள்ளது. இதில் 72 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரும், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,465 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,036 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 293 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் மொத்தம்293 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,327 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69, 49, 65, 70 வயதுடைய 4 ஆண்களும், 59 வயதுடைய பெண் ஒருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,020 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறியும் பொருட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் 50 வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அவர்களில் உடல் வலி, சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கிராம செவிலியர் மூலம் வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கடைவீதிகளில் சென்றவர்களை அழைத்து அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீசார் இணைந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிய 4 காய்கறி கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது. 3 மளிகை கடைகளுக்கு ரூ.500 வீதம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் மண்டல துணை தாசில்தார் கனகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் குமார், முத்து பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 70). இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர், சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை அருகே கொரோனாவால் இறந்தவர் உடலுக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68). இவர் அந்த கிராமத்தில் ரைஸ்மில் நடத்தி வந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து உறவினர்கள் உடலை ஆம்புலன்சில் ஏற்றி வந்து வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு பந்தல் அமைத்து இறுதி சடங்கு செய்யவும் முடிவு செய்தனர்.

    இது குறித்து தகவலறிந்த செந்துரை தாசில்தார் குமரய்யா வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

    அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடலை ஏற்றி சென்று தாசில்தார் முன்னிலையில் அரசு விதிமுறைகள் படி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் அச்சமின்றி உறவினர்கள் உடலை வீட்டில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நகராட்சி சார்பில் ‘டிரோன்’ மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் மேற்பார்வையில் தொடங்கியது. இந்த டிரோன் கருவியானது 12 கிலோ எடையில், 12 லிட்டர் கிருமி நாசினியை வான்வழி மூலம் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் டிரோன் குழுவினர் வரவழைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×