search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத்தேர்தல் வைக்காமலேயே தி.மு.க. ஆட்சிக்கு வரும்- வைகோ பேச்சு
    X

    பொதுத்தேர்தல் வைக்காமலேயே தி.மு.க. ஆட்சிக்கு வரும்- வைகோ பேச்சு

    பொதுத்தேர்தல் வைக்காமலேயே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசினார். #vaiko #dmk #gajacyclone #sterliteplant

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ம.தி.மு.க. சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் டெல்டா மாவட்டங்களை அழித்து விட்டது. இதனால் விவசாயிகள் 25 ஆண்டுகளுக்கு தலையெடுக்க முடியாது. மேகதாதுவில் அணை கட்ட போகிறார்கள். உச்சநீதிமன்றம் தடுத்தாலும் அந்த தீர்ப்புக்கு எதிராக அணை கட்டுவார்கள். இது ஏற்கனவே கேரளாவில் நடைபெற்று உள்ளது. அணை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டும்தான். அதை மோடி அரசு கொண்டுவர முயற்சிக்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு மத்திய- மாநில அரசுகள் பக்கபலமாக இருக்கிறது. தமிழக அரசு வழக்கு போட்டு இருந்தாலும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து விடுகிறது. அந்த ஆலைக்கு எதிராக எடுக்க வேண்டியதை தமிழக அரசு எடுக்காத காரணத்தினால் வழக்கு பலவீனமடைந்து விட்டது. 

    எனவே ஆலையை திறக்க சொல்ல வாய்ப்பிருக்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கும் போவோம். இந்த ஆலையை அகற்றி தான் தீரவேண்டும். 13 பேரை திட்டமிட்டு படு கொலை செய்தது யார்?. தூண்டிவிட்டது யார்? என்று தெரிந்து அவர்களை வேலையை விட்டு நீக்கி ஜெயிலில் போட வேண்டும்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மீண்டும் வராது. மாநில கட்சிகளின் கூட்டமைப்பு, காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து ஆட்சி அமைக்கும். நம் மாநில உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். ராமர் கோவில் கட்டுவது என்ற பெயரில் இந்து- முஸ்லீம் மக்களிடையே ரத்தக்களறி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்தி இந்துக்கள் ஓட்டை வாங்க நினைக்கின்றனர்.  

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் தி.மு.க. தலைமையிலான அணி தான் வெற்றிபெறும். 20 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் வர வாய்ப்பிருக்கிறது. இதில் 18 தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி பெறும். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும். 20 தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். பொதுத்தேர்தல் வைக்காமலேயே தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். நான் பொங்கலுக்கு பின்பு தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #dmk #gajacyclone #sterliteplant

    Next Story
    ×