என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளார்களாம்.
    கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

    இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 

    கடைசி விவசாயி படத்தின் போஸ்டர்
    கடைசி விவசாயி படத்தின் போஸ்டர்

    இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
    தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். 

    இந்நிலையில், நடிகர் சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    சிம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு
    சிம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இதேபோல் டுவிட்டரில் நடிகர் சிம்புவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெறும் 'மாங்கல்யம்' பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
    அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்ந்ததாக கோமாளி பட நடிகை தெரிவித்துள்ளார்.
    கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை  சம்யுக்தா ஹெக்டேவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக இருக்கிறது. என்னை உதவி அற்றவளாக உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்ற பயம் வந்தது. மரண பயம் கொடுமையானது. 

    சம்யுக்தா ஹெக்டே
    சம்யுக்தா ஹெக்டே

    அம்மா, அப்பாவும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். எங்களுக்கு அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்கிறோம். எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்’’ என்று கூறியுள்ளார்.
    இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்தார்.
    இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்த ஜிவி பிரகாஷ், ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிக்கும் நபரின் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாடுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    ஜிவி பிரகாஷ்
    ஜிவி பிரகாஷ்

    இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய 'கண்ணாண கண்ணே' பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த ‘சீறு’ படத்தில் 'செவ்வந்தியே...' என்ற பாடலைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் டி இமான்.
    கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தனுஷ் பட நடிகை ஒருவர், தனது திருமணத்தை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளாராம்.
    தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    பவ்யா பிஷ்னோய், மெஹ்ரின் பிர்சாடா

    இதுகுறித்து மெஹ்ரின் கூறும்போது, “கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம்'' என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக மெஹ்ரின் முடிவு செய்துள்ளார். புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி, என்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை என்று கூறியுள்ளார்.
    யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில்போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அதை பொதுவெளியில் சமீபத்தில் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அதேபோன்று நடிகர் மயில்சாமியும் போலி கணக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். 

    மயில்சாமி

    மயில்சாமி பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் சமீபகாலமாக தப்பான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதையறிந்த நடிகர் மயில்சாமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை, என்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை. அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டேன். அதை யாரும் பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவின் புதிய புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
    பிக்பாஸ் தமிழின் 3-வது சீசன் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பெயரிடப்படாத மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.

    லாஸ்லியா

    சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவிப்பார்கள். ஆனால், தற்போது காதில் பூ வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளை பதிவு செய்து கலாய்த்து வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
    நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

    இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

    கீர்த்தி சுரேஷ் - காஜல் அகர்வால்
    கீர்த்தி சுரேஷ் - காஜல் அகர்வால்

    அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

    தமன்னா - திரிஷா
    தமன்னா - திரிஷா

    கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி கேட்பதாக தகவல். இவர் அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி வாங்குகிறார். இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் காஜல் அகர்வாலிடம் உள்ளன. திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது.
    எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா
    மனைவியுடன் யுவன்சங்கர்ராஜா

    ஸப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவனின் மனைவி ஸப்ரூன், “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
    சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி பகிர்ந்துக் கொண்டார்.

    இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு, எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக” என பதிவு செய்திருக்கிறார்.


    கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    வைரமுத்து - பார்வதி
    வைரமுத்து - பார்வதி

    ஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.
    ×