தொழில்நுட்பம்
சீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது. #Samsung
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகாமக இருக்கிறது.
இந்நிலையில், சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் சான்று பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. சீன வலைதளத்தில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வெளியாகவில்லை.
சீன வலைதளத்தில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM-F900 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் சோதனைகளிலும் SM-F900 என்ற மாடல் நம்பர் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வசதி மற்றும் 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சோதனை செய்ய துவங்கிவிட்டது. முன்னதாக நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்தான விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இணையத்தில் லீக் ஆன தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விலையை பொருத்த வரை சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியன்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,37,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இதன் டாப் என்ட் வேரியன்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,83,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.