அறிந்து கொள்ளுங்கள்

எனக்கே ஸ்கெட்சா?.. AI மூலம் உளவு - அமெரிக்கா ராணுவ ரகசியங்களை கசியவிடும் சீன ஸ்டார்ட் அப் - ஈரானுக்கு உதவி?

Published On 2026-03-11 15:10 IST   |   Update On 2026-03-11 15:11:00 IST
  • ஈரான் அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே இது தொடங்கியது.
  • F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அம்பலமாகின.

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலால், ஈரான் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த போரில் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடமாட்டம் அனைத்தயும் சீனாவை சேர்ந்த MizarVision என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்காணித்து அந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது தெரியவந்துள்ளது.

அமெரிக்க ராணுவ ரகசியம் என்று கருதப்படும் இவை மிகவும் எளிமையாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

ஆராய்ச்சியாளர் ஷானகா அன்செல்ம் பெரேரா மேற்கொண்ட ஆய்வின்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே ஜோர்டான், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் எங்கு, எந்தெந்த ஆயுதங்கள் உள்ளன என்பதை இந்த நிறுவனம் செயற்கைக்கோள் படங்களுடன் வரைபடம் போல வெளியிட்டது.

அமெரிக்காவின் F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இதில் அடங்கும்.

சீனாவின் Jilin-1 செயற்கைக்கோள் கூட்டமைப்பு மற்றும் Maxar, Airbus போன்ற மேற்கத்திய செயற்கைக்கோள் தரவுகளை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து இந்த உளவு வேலையை அந்நிறுவனம் செய்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஈரானுக்குப் போர் வியூகங்களை வகுக்கப் மறைமுகமாக உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

வழக்கமாக ராணுவ ரகசியமாக வைக்கப்படும் இத்தகைய தகவல்களை ஒரு தனியார் நிறுவனம் பொதுவெளியில் வெளியிடுவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன் போரின் போது மேற்கத்திய நாடுகள் இதேபோன்ற வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தியது போல, இப்போது சீனா தனது ஏஐ ஸ்டார்ட்அப்கள் மூலம் அதே உத்தியை பயன்படுத்துகிறது.

இனி வரும் போர்கள் ஒரு ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்காது. மாறாக, விண்வெளியில் இருந்து ஒவ்வொரு இலக்கையும் அடையாளம் காணும் ஒரு ஏஐ மாடலுடன் தான் தொடங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

Tags:    

Similar News