அறிந்து கொள்ளுங்கள்

எல்லாமே அப்படியே தெரியும்!.. பயனர்களின் அந்தரங்கத்தை பார்க்கும் AI Smart Glass?.. சர்ச்சையில் மெட்டா

Published On 2026-03-05 17:50 IST   |   Update On 2026-03-05 17:50:00 IST
  • நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை.
  • பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி.

பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை செயல் அதிகாரியாக பேஸ்புக்-ஐ உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

பயனர்களின் தரவுகளை உளவு பார்க்கும், திருடும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டாவின் பேஸ்புக் பல முறை உள்ளாகி நீதிமன்ற விசாரணையையும் எதிர் கொண்டது.

மெட்டா சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி மெட்டா ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இயங்கி வருகிறது.

அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் Ray Ban ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஒன்றாக உள்ளது.

எசிலார் லுக்சோட்டிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், 2025ல் மட்டும் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள் கண்காணிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கென்யாவின் நைரோபியில் உள்ள Sama என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், மெட்டா கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

கண்ணாடியை அணிந்துகொண்டு இருக்கும் பயனர்கள் உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது மற்றும் உடலுறவு கொள்வது போன்ற மிக அந்தரங்கமான காட்சிகள் இந்தக் கண்ணாடிகள் மூலம் படமாக்கப்பட்டு, அந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் தெளிவாகத் தெரிவதாகவும், இவை கசிந்தால் மிகப்பெரிய பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.

"நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை. சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்" என்று அந்த கென்ய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஊழியர்கள் பிறரின் அந்தரங்கங்களை கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை என்றாலும் வேறு வழியின்றி அதில் ஈடுபட்டுள்ளதாக கூறுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏஐ-ஐ மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம் என்று மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

Tags:    

Similar News