அறிந்து கொள்ளுங்கள்

AI-ஆல் வேலை போகுமா? இளைஞர்களுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி கொடுத்த அட்வைஸ்!

Published On 2026-02-27 11:55 IST   |   Update On 2026-02-27 11:55:00 IST
  • படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.
  • நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி (79).

இவர் அவ்வப்போது கலந்துரையாடல்களில் பங்கேற்று தொழில்துறை குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உலகில் அசுர வளர்ச்சி கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு குறித்து நாராயண மூர்த்தி தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனியார் ஊடக நேர்காணலில் பேசிய நாராயண மூர்த்தி, " ஏஐ என்பது ஒரு சாதனம் மட்டுமே. மனிதனின் சிந்திக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.

முன்னதாக கணினிகள் அறிமுகமான போதும் இதேபோன்ற அச்சங்கள் எழுந்தன. ஆனால் அவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினவே தவிர, வேலைகளைப் பறிக்கவில்லை.

தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை விட, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டால், ஐடி துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

உற்பத்தித் திறனுக்காக ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்துவதில் நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.

ஒரு புத்திசாலியான மனிதன் இத்தகைய உதவி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த தரத்தையும், சிறந்த அளவிலான உற்பத்தித் திறனையும் பெற முடியும்.

எனவே, இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தொழில்நுட்பங்களை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி அவற்றில் தேர்ச்சி பெறுவதுதான்.

இந்திய இளைஞர்கள் கடின உழைப்புடன் ஏஐ போன்ற நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைத்தால், இந்தியாவின் உற்பத்தித்திறன் உலக அளவில் முதலிடத்தைப் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.

நாராயணமூர்த்தியின் ஆலோசனைப்படி இன்போசிஸ் நிறுவனம் ஏற்கனவே, புதிய ஊழியர்களுக்கும் ஏற்கனவே உள்ளவர்களுக்கும் 'ஏஐ பிராம்ட் இன்ஜினியரிங்' குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

Tags:    

Similar News