இந்தியா

எவரெஸ்ட் சிகரம் வரை பறக்கும் H125 ஹெலிகாப்டர்: உற்பத்தியை தொடங்கி வைத்த மோடி-மேக்ரான் - என்ன ஸ்பேஷல்?

Published On 2026-02-18 09:39 IST   |   Update On 2026-02-18 09:39:00 IST
  • கடும் குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
  • H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.

முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்" என்றார்.

H125 ஹெலிகாப்டர்:

நேற்று தொடங்கப்பட்ட ஆலையின் அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதே இலக்காகும்.

H125 ஹெலிகாப்டர், ஒரு விமானி மற்றும் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

இது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 662 கி.மீ பயணிக்க முடியும்.

இமயமலையின் கடும் குளிரிலும், ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.

மீட்புப் பணிகள், மருத்துவ அவசரநிலைகள், தீயணைப்பு மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படும்.

H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

H125M ரக ஹெலிகாட்பரில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைப் பொருத்த முடியும்.

எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க, தரையோடு தரையாக மிகத் தாழ்வாகப் பறக்கும் திறன் கொண்டது.

இந்திய எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது பிரான்ஸ், பிரேசில், கத்தார், இந்தோனேசியா உட்பட சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் 400க்கும் மேற்பட்ட H125 ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

Tags:    

Similar News