உலகம்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

Published On 2022-07-08 12:59 IST   |   Update On 2022-08-01 15:07:00 IST
2022-07-14 14:51 GMT

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் ஜெட் விமானங்களை வீழ்த்தியதாகவும், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. தெற்கு ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையை காலிபர் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கி, உக்ரைன் போர் வாகனங்களை அழித்ததாகவும் கூறியது.

2022-07-14 12:53 GMT

உக்ரைன்- ரஷியா போர் உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க நிதித்துறை மந்திரி ஜேனட் யெல்லன் தெரிவித்தார். ஜி20 மந்திரிகள் இந்தோனேசியாவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். உலகமே கொரோனா தொற்றுநோயிலிருந்து மீள்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ரஷியாவின் படையெடுப்பு பணவீக்கத்தை உயர்த்தியிருப்பதாக அவர் கூறி உள்ளார்.

2022-07-14 12:47 GMT

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தை பாதிப்பதுடன், பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என தற்போதைய தரவுகள் காட்டுகின்றன. ரஷியாவின் போர் ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் கூறி உள்ளார்.

2022-07-14 09:59 GMT

மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் இன்று மூன்று ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. தேசிய போலீஸ் தலைவர் ஹிஹோர் க்ளிமென்கவின், முதற்கட்ட தகவலை மேற்கோள் காட்டி, ஏவுகணைகள் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்கி அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பெரிய தீ விபத்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவி வாகனங்களை எரித்தது.

2022-07-14 01:12 GMT

உக்ரைன் கிழக்கு பகுதி நகரங்களை ஆக்ரமித்து வரும் ரஷிய படைகள், குடியிருப்பு பகுதிகளைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் வழங்கிய சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் ஆறு வெடிமருந்துக் கிடங்குகளை உக்ரைன் ராணுவம் விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் தாக்கியதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2022-07-14 01:11 GMT

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தை குழுவினர் நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து அதிக அளவு உணவு தானியங்களை விடுவித்து, ஏழை நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முட்டுகட்டையை நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை நடத்தினர்.

2022-07-13 17:24 GMT

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் பிரிந்த டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மக்கள் குடியரசுகளை சுதந்திர நாடுகளாக வட கொரியா அங்கீரித்துள்ளது. இதனை பிரிவினைவாத தலைவரும் ரஷிய அரசு செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன. ரஷியா மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக வட கொரியா இந்த பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், வடகொரியாவுடனான உறவை துண்டித்தது. 

2022-07-13 14:03 GMT

அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிலப்பகுதியை ரஷியாவுக்கு விட்டுக்கொடுப்பதை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரி குலேபா நிராகரித்தார். ரஷியா- உக்ரைன் இடையே, எந்த சமாதான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

‘இந்தப் போரில் எங்கள் பிரதேசங்களை விடுவிப்பதும், எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதும், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் முழு இறையாண்மையை மீட்டெடுப்பதும் எங்கள் நோக்கம் ஆகும். இது பேச்சுவார்த்தை தொடர்பான எங்கள் நிலைப்பாட்டின் இறுதிப் புள்ளி’ என்றார் குலேபா.

2022-07-13 13:27 GMT

உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறிய தகவலை உக்ரைன் விமானப்படை மறுத்துள்ளது. 

2022-07-13 13:25 GMT

கருங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான மைகோலெய்வை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 28 ராக்கெட்டுகளின் சரமாரியான தாக்குதலால் பல பகுதிகளில் மருத்துவமனை மற்றும் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அதிபர் அலுவலக துணைத் தலைவர் கூறி உள்ளார்.

Similar News