உலகம்

இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் நாட்டிற்கு சோதனையாகியுள்ளது: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

Published On 2026-02-21 10:44 IST   |   Update On 2026-02-21 10:44:00 IST
  • வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?.
  • அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைப் பாதுகாக்க விரக்தியை வெளிப்படுத்தாமல், இன்னும் 18 நாட்கள் மட்டுமே காத்திருந்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.

நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது வரிக் கொள்கையை ரத்து செய்த பிறகு, ஜனாதிபதி டிரம்ப் (i) மோடி தனது சிறந்த நண்பர் (ii) இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும் (iii) இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை (ஆபரேசன் சிந்தூர்) நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதாக மிரட்டி மே 10, 2025 அன்று அவர் தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை நிறுத்தினேன் என அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?. அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது. மோடி இவ்வளவு விரக்தியடைந்து, வெள்ளை மாளிகையில் உள்ள தனது நல்ல நண்பரை அணுகி ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது எது?. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் இந்தியா சோதனைக்குள்ளாகியுள்ளது

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News