நைஜீரியா: கால்நடைகளுக்காக கிராம மக்கள் 33 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
- ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
- மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாக கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கால்நடைகளை திருடிச் செல்ல, பயங்கரவாதிகள், 33 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம் அரங்கேறி உள்ளது.
நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தின் ஏழு கிராமங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு பிவு என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை பக்கத்து மாநிலமான சோகோட்டோவில் இருந்து வந்த லகுராவா என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்ட நிலையில், மாமுனு என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 16 பேர் கொல்லப்பட்டனர். அங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கால்நடைகளைத் திருடுவதற்காகவே இந்தத் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட கூடுதல் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
லகுராவா என்பது வடமேற்கு நைஜீரியாவில் சமீபகாலமாக உருவெடுத்துள்ள ஒரு புதிய ஆயுதக்குழுவாகும்.
ஆரம்பத்தில் உள்ளூர் மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாகக் கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த ஆண்டு நைஜீரிய அரசு லகுராவாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.