எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பாக சகோதரர் கைது - மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்!
- நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
- நானும் என் குடும்பத்தினரும் உங்கள் அனைவருக்கும் எங்களது கடமையையும், சேவையையும் தொடர்ந்து செய்வோம்
பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இன்று அவர் கைது செய்யபட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆண்ட்ரூவின் சகோதரரும், பிரிட்டன் மன்னருமான சார்லஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
"ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகம் குறித்த செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த கவலை அடைந்தேன். இந்த விவகாரத்தை தகுந்த முறையில் மற்றும் தகுந்த அதிகாரிகளால் விசாரிப்பதற்கான முழுமையான, நியாயமான மற்றும் முறையான வழிமுறைகள் இனி தொடரும்.
இதில், நான் முன்பே கூறியது போல, அவர்களுக்கு எங்களது முழுமையான மற்றும் மனப்பூர்வமான ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு. நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இந்த செயல்முறை தொடரும் வேளையில், இந்த விவகாரம் குறித்து நான் மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இதற்கிடையில், நானும் என் குடும்பத்தினரும் உங்கள் அனைவருக்கும் எங்களது கடமையையும், சேவையையும் தொடர்ந்து செய்வோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.