'ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
- விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
- போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே இந்த செயல்
'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினாலும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2022-ல் இருந்து ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக சுமார் 20,000 குழந்தைகள் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
குழந்தைகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் போர்க்களத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே அப்படி செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் உறவினர்கள் முன்வந்து, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிசெய்யும் பட்சத்தில், அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.