உலகம்

'இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை' - ரஷ்யா

Published On 2026-02-19 15:26 IST   |   Update On 2026-02-19 15:26:00 IST
  • இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது.
  • இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தகவலும் வரவில்லை என்றும், அமெரிக்காவைத் தவிர வேறுயாரும் இந்த கூற்றை தற்போது வரை முன்வைக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்து வருகிறது.

மறுபுறம் இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் மீண்டும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்பதை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.

வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகிறது. 

ரஷ்ய எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்று நம்புவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. சுதந்திர நாடுகளுக்கு கட்டளையிடும் உரிமையைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் கூற்றுகளில் புதிதாக எதுவும் இல்லை" என தெரிவித்தார். 

இதன்மூலம் தற்போதுவரை இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பது உறுதியாகிறது. 

Tags:    

Similar News