ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து ஒரே காரில் ரஷிய அதிபர் புதினுடன் பயணித்த பிரதமர் மோடி
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
- புதின் உடனான உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை என்று பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில்
பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்ட சென்றனர்.
இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புஉச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து, ஜனாதிபதி புதினும் நானும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை" என்று தெரிவித்தார்.
அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.