உலகம்

கனடாவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி - தாக்குதல் நடத்தியவர் தற்கொலை

Published On 2026-02-11 10:27 IST   |   Update On 2026-02-11 10:27:00 IST
  • பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
  • தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு 7 முதல் 12-ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. 25 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துகிடந்தார். அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட வில்லை.

அதேவேளையில் தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிசூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. 

Tags:    

Similar News