ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு வங்காளதேசத்தில் நாளை பொதுத்தேர்தல்
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்காள தேசத்தில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், அரசின் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் 'ஜூலை சாசனம்' என்ற சீர்திருத்தத் தொகுப்பு குறித்த பொது வாக்கெடுப்பும் நடக்கிறது.
350 இடங்களை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.
தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டும், சீர்திருத்தங்கள் குறித்த வாக்கெடுப்பிற்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்காளதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நாளை காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.