உலகம்

மக்களை கொல்லும் மதவாத அரசுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்யக் கூடாது - வீடியோ வெளியிட்டு ஈரான் இளைஞர் தற்கொலை

Published On 2026-02-11 11:23 IST   |   Update On 2026-02-11 11:23:00 IST
  • இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் சுமார் 6,900 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளது.

குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்குக் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக பேசியிருந்தார். மேலும் ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை பிரிவு சென்றுகொண்டிருப்பதாக கூறினார். ஆனால் அதன் பின் ஈரான் - அமெரிக்கா அரசுகள் இடையே சமரசம் ஏற்பட்டது.

ஒருபுறம் போராட்டக்காரர்களைக் கொடூரமாக ஒடுக்கி வரும் ஈரான், மறுபுறம் அமெரிக்காவுடன் ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஈரானின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷெஹ்ரை சேர்ந்த பூரியா ஹமிதி என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது தற்கொலைக்கு முன்னதாக பூரியா ஹமிதி, 10 நிமிடம் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார்.

அதில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் மதவாத அரசுடன் எந்தவித இராஜதந்திர ஒப்பந்தத்தையும் செய்யக் கூடாது. இந்த அரசுடன் ஒப்பந்தம் செய்வது, போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

ஈரானில் நடக்கும் போராட்டங்களில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்களை விடப் பெரிய இனப்படுகொலை.

இந்த ஆயுதம் ஏந்திய அரசை எங்களால் தனியாக எதிர்கொள்ள முடியாது. அமெரிக்கா ஈரானைத் தாக்குவது மட்டுமே எங்களது கடைசி நம்பிக்கை. ஈரான் நீடூழி வாழ்க" என்று பேசியுள்ளார்.  

Tags:    

Similar News