உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் கை- கால்களை இழந்த 7 வயது சிறுவன்.. துபாய் இளவரசரை நெகிழ வைத்த வைரல் வீடியோ

Published On 2024-12-23 11:15 IST   |   Update On 2024-12-23 11:16:00 IST
  • உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
  • பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.

இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார். 

Tags:    

Similar News