முன்கூட்டியே தொடங்குகிறது த.வெ.க. மாநாடு?
- மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
- சற்று நேரத்தில் விஜய் மேடைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாநாட்டு முகப்பில் உள்ள உள்ள 5 நுழைவு வாயில்கள் வழியாக சாரை சாரையாக தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதுபோன்ற எந்த ஒரு மாநாட்டிற்கும் எழுச்சியோ, தொண்டர்கள் வருகையோ இருந்ததில்லை என்று கூறுமளவிற்கு த.வெ.க. 2-வது மாநில மாநாடு அனைத்து தரப்பினரையும் பேச வைத்துள்ளது.
மாநாடு நடைபெறும் பாரப்பத்தி பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தொண்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் அவதியுறும் நிலையில், தற்போதே நிர்வாகிகள் மாநாட்டு மேடையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் விஜய் மாநாட்டு மேடைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.