தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை: இ.பி.எஸ். சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி.
- ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற விமான மூலம் தூத்துக்குடி வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் கஞ்சா, போதை பொருள் தமிழகத்தில் எங்கிருந்து வருகிறது? அவை இங்கு அதிகம் வருவதற்கு காரணம் குஜராத் மாநில துறைமுகம், முத்ரா துறைமுகம் இந்த 2 துறைமுகம் தான் முக்கியமான துறைமுகம் தான்.
பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடிய துறைமுகமான முத்ரா துறைமுகத்தின் மூலம் ஆந்திரா வழியாக போதை பொருட்கள் தமிழகம் வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்தியா பார்டர் போலீஸ், மத்திய உளவுத்துறை, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப். போதைப்பொருள் தடுப்பு பிரிவு நார்காடிக் டிபார்ட்மெண்ட் இதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டுக்குள் போதை பொருள் வருவதை தடுக்க இயலவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதானி துறைமுகத்தில் பல லட்சக்கணக்கான மூட்டை போதை பொருட்கள் பறிமுதல் செய்து வைத்திருந்தார்கள். அதற்கு ஏதாவது எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசை பார்த்து கேட்பாரா? எப்படி கைப்பற்றி வைத்திருந்த போதை பொருட்கள் காணாமல் போய்விட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீண்டும் கான்லா துறைமுகத்திற்கும் முத்ரா துறைமுகத்திற்கும் மறு விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசிடம் கேட்க வேண்டும்.
ஒரு காலத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்யும்போது வழக்குகளை பதிவு செய்யப்படாது. இப்போது போதைப் பொருள்கள் கண்டு பிடித்தால் உடனுக்குடன் வழக்கு தமிழக அரசு, தமிழக காவல்துறை பதிவு செய்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த ஆட்சிக்கும், தற்போது நடைபெறும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும், முழுமையான விவரத்தை கேட்டு அறிவதற்காகவும் ஆறுமுகம் மங்கலம் செல்ல உள்ளேன்.
காங்கிரஸ் எப்போதுமே ஆணவ படுகொலை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என கூறி வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி. கட்சித் தலைவர்களையே இழிவு படுத்தி பேசக்கூடிய பா.ஜ.க.வுடன், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது இயற்கைக்கு எதிரான கூட்டணி. அ.தி.மு.க.வின் கொள்கைக்கு முரணான கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தமிழக நலனின் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்றார்.
பேட்டியின் போது ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.