தமிழ்நாடு செய்திகள்

ஓபிஎஸ், டிடிவியை கழற்றி விடும் பாஜக?- நயினார் நாகேந்திரன் அளித்த பதில்

Published On 2025-05-16 13:25 IST   |   Update On 2025-05-16 14:52:00 IST
  • ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
  • தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மதுரை:

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக் கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

நேற்று திருச்சியிலும், நாளை மதுரையிலும், இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு. தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் இருப்பதால் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.

த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக் கூடிய சக்தி மக்களிடம் உள்ளது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News