கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார்.
- அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
தேர்தல் பணிகளில் தி.மு.க.வை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.