தமிழ்நாடு செய்திகள்

புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா.. கொடி அறிமுகம்!

Published On 2025-09-15 22:46 IST   |   Update On 2025-09-15 22:47:00 IST
  • என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
  • 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே சில காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது.

இதற்கிடையே விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.

32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா புதிய கட்சியை துவங்கி உள்ளார். கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடைய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News