தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன் வைத்துள்ளது- அன்புமணி சாடல்
- கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தி.மு.க. அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப் பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது.
தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை தி.மு.க. அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.